பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு ஏவுகணை சோதனை.. வேலையை காட்டிய வடகொரியா.. டிரம்ப் அதிர்ச்சி!
அமெரிக்காவை பேச்சுவார்த்தைக்கு அழைத்த வடகொரியா இன்று காலை ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது.
பியாங்யாங்: அமெரிக்காவை பேச்சுவார்த்தைக்கு அழைத்த வடகொரியா இன்று காலை ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது. உலக நாடுகள் இடையே வடகொரியாவின் இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில வருடங்களாக வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையில் பெரிய அளவில் சண்டை நிலவி வந்தது. முக்கியமாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றபின் இந்த பிரச்சனை பெரிதானது.
ஆனால் போக போக இது சரியாகி கிம் ஜோங் உன் மற்றும் டிரம்ப் இருவரும் நேரில் சந்தித்துக்கொண்டார்கள். இதில் நிறைய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதேபோல வடகொரியா தென்கொரியா பிரச்சனையும் சரியானது.
ஆனால் என்ன
இதில் அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதாக வடகொரியா அறிவித்தது. ஆனால் இது தொடர்பான இறுதி ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை. வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவதற்கு அமெரிக்கா இன்னும் தயக்கம் தெரிவித்து வருகிறது. இதனால் இன்னும் இந்த ஒப்பந்தம் முழுமை பெறவில்லை.
அழைப்பு
இது தொடர்பாக அமெரிக்கா வடகொரியா மீண்டும் ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளது. அதன்படி இந்த மாதம் இறுதியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் இருவரும் பொதுவான ஒரு இடத்தில் சந்திப்பார்கள். அவர்கள் முக்கிய ஒப்பந்தங்களை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போச்சு
இந்த நிலையில்தான் வடகொரியா தற்போது மீண்டும் தீவிரமாக தனது ஆயுதங்களை பரிசோதனை செய்ய தொடங்கி உள்ளது. முக்கியமாக அதிக சக்தி கொண்ட ராக்கெட்டுகளை வடகொரியா பரிசோதிக்க தொடங்கி இருக்கிறது. கடந்த மாதம்தான் வடகொரியா சூப்பர் லார்ஜ் ராக்கெட் என்ற நவீன ரக ஏவுகணையை சோதனை செய்துள்ளது.
மொத்தம் எத்தனை
கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் வடகொரியா மொத்தம் 7 ஏவுகணை சோதனைகளை செய்துள்ளது. அதன்படி இன்று சக்தி வாய்ந்த ஏவுகணைகள் இரண்டை சோதனை செய்தது. தென்கொரியாவிற்கு அருகே உள்ள கடல் பகுதியில் வடகொரியா இந்த சோதனையை செய்தது.
ஏன் அதிர்ச்சி
இது மிகவும் சக்தி வாய்ந்த, 350கிமீ தூரத்திற்கும் அதிகமாக தாக்க கூடிய ஏவுகணை என்று கூறப்படுகிறது. மொத்தம் இரண்டு ஏவுகணைகளை வடகொரியா இப்படி சோதனை செய்துள்ளது. உலக நாடுகளை இந்த சோதனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இதற்கு பின் இரண்டு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
என்ன காரணம்
தென்கொரியாவுடன் சேர்ந்து அமெரிக்கா ஆயுத பயிற்சி மேற்கொண்டது. இதனால் கோபம் கொண்ட வடகொரியா இப்படி சோதனை செய்து வருகிறது என்கிறார்கள். அதேபோல் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையின் போது தனது கை உயர்ந்திருக்க வேண்டும் என்பதால் வடகொரியா இப்படி பயமுறுத்துகிறது என்றும் கூறுகிறார்கள்.