ஒரு காலத்தில் உலகின் பெரிய கோடீஸ்வரன்.. இப்போது.. சவுதியில் கடன் மோசடி செய்தவருக்கு நேர்ந்த கதி!
சவுதி அரேபியாவில் பெரிய நிறுவனமாக இருந்த சாத் குரூப் நிறுவனத்தின் நிறுவனர் மான் அல் சனேவின் சொத்துக்கள் அனைத்தும் ஏலம் விடப்பட்டு வருகிறது.
Recommended Video
ரியாத்: சவுதி அரேபியாவில் பெரிய நிறுவனமாக இருந்த சாத் குரூப் நிறுவனத்தின் நிறுவனர் மான் அல் சனேவின் சொத்துக்கள் அனைத்தும் ஏலம் விடப்பட்டு வருகிறது. அவர் செய்த கடன் மோசடி காரணமாக சொத்துக்கள் எல்லாம் ஏலம் விடப்பட்டு வருகிறது.
சவுதியின் முடி இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றதில் இருந்து அங்கு பல சீர்திருத்தங்கள் நடந்து வருகிறது. பெண்கள் உரிமை தொடங்கி பொருளாதார சீர்திருத்தம் வரை அங்கு பல மாற்றங்கள் நடந்து வருகிறது.
அங்கு சினிமா தியேட்டர் திறப்பது, பெண்களுக்கு லைசன்ஸ் கொடுப்பது என நல்ல மாற்றங்களும் நடந்து வருகிறது. கடந்த வருடமும் கூட ஊழல் செய்த பல அரச குடும்பத்தினர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
சோதனை
சவுதியின் முடி இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றதில் இருந்து அங்கு நிறைய மாற்றங்கள் கொண்டு வருகிறார். சில மாதம் முன்பு அங்கு இருக்கும் முக்கிய அதிகாரிகளின் வீட்டில் சொத்துக்கள் எவ்வளவு இருக்கிறது என்று சோதனை நடத்தினார். பல்வேறு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இதில் சவுதியின் முக்கியமான பணக்காரரும், இளவரசருமான அல்வாலீத் பின் தலால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டார்
இந்த நிலையில் இதில் பல வியாபாரிகளும், பொருளாதார முதலைகளும் கூட கைது செய்யப்பட்டனர். அப்படி கைது செய்யப்பட்டவர்தான் மான் அல் சனே. இவரது சாத் குரூப் எனப்படும் மல்டி மில்லியன் நிறுவனம் செய்த மோசடி காரணமாக இவர் கைது செய்யப்பட்டார். அங்கே இருக்கும் வங்கிகளுக்கு இவர் 650 கோடி வரை கடன் பாக்கி அளிக்க வேண்டும். இதனால் இவர் கைது செய்யப்பட்டார்.
நிறுவனம்
இவரின் மோசடிதான், சவுதியில் பெரிய கடன் பாக்கி மோசடி ஆகும். இவரின் சாத் குரூப் நிறுவனம் சவுதியின் முன்னணி ஹெல்த்கேர் நிறுவனம் ஆகும். இதை வைத்து பல மில்லியன் ரியால்களை சம்பாதித்த இந்த நிறுவனம் 2007ல் போர்ப்ஸ் பட்டியலில், உலகின் முக்கிய 100 நிறுவனங்களில் பட்டியலில் ஒன்றாக இடம் பிடித்தது. அந்த அளவிற்கு இந்த நிறுவனம் மிகப்பெரியது.
விசாரிக்க ஆணையிட்டார்
இப்படிப்பட்ட நிறுவனத்தின் அதிபரைதான் சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் கைது செய்தார். அதோடு இவர் மீதான குற்றச்சாட்டுகளின் மீது விசாரணை நடத்தவும் ஆணையிட்டார். இதோ இப்போது ஒரு வருடத்தில் இவர் மீதான விசாரணை நடந்து முடிந்துள்ளது.
தீர்ப்பளிக்கப்பட்டது
இதில் நீதிபதிகள் அளித்த தீர்ப்புதான் மிகவும் முக்கியமானது. அதன்படி இவரது சொத்துக்கள் அனைத்தையும் முடக்கும்படி ஆணையிட்டனர். இவர் வைத்திருக்கும் கடன் பாக்கி, இவரால் இழப்பை சந்தித்தவர்கள், சம்பள பாக்கியால் தவிக்கும் பணியாளர்கள் என எல்லோருக்கும் அந்த பணத்தை திருப்பி அளிக்க வேண்டும். இதற்கு அவரது சொத்துக்களை ஏலம் விட வேண்டும் என்று ஆணையிட்டனர்.
எவ்வளவு பணம்
இந்த நிலையில் தற்போது இவரது சொத்துக்கள் ஏலம் விடப்பட உள்ளது. ஏற்கனவே 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் ஏலம் விடப்பட்டுள்ளது. இன்னும் 3700 கோடி ரூபாய் பொருட்கள் வரை ஏலம் விடப்பட உள்ளது. மொத்தமாக 4700 கோடி ரூபாய் பொருட்கள் சொத்துக்கள் ஏலத்தில் சிக்கி உள்ளது.
என்ன எல்லாம் ஏலம்
இதில் அவர் இருந்த பங்களா, பல ஏக்கர் நிலம், இவர் நிறுவனத்தில் இருந்த பொருட்கள், தங்கம், வைரம், பல நூறு லாரிகள், மருந்து பொருட்கள், இவரின் கார்கள் எல்லாம் ஏலம் விடப்பட உள்ளது. இது அந்த நாட்டில் மிகப்பெரிய புரட்சியாக பார்க்கப்படுகிறது. மல்லையாவும், நீரவ் மோடியும் ஒருவேளை சவுதியில் இப்படி செய்திருந்தால் தண்டிக்கப்பட்டு இருப்பார்களோ என்னவோ!