டாக்கா தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி... ஷ்ரத்தா கபூரின் "தீவிர" ரசிகராம்!
டாக்கா: ஷ்ரத்தா கபூருக்கு இப்படி ஒரு ரசிகர்.. டாக்காவில் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவர் நடிகை ஷ்ரத்தா கபூரின் தீவிர ரசிகராம்.
இந்த தீவிரவாதியை வங்கதேச பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கையின்போது சுட்டுக் கொன்று விட்டனர். அந்த தீவிரவாதியின் பெயர் நிப்ராஸ் இஸ்லாம். 22 வயதேயாகும் இவர் சனிக்கிழமை டாக்காவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின்போது பிணையாளிகளை சுட்டுக் கொன்ற கொடூர நபர்களில் ஒருவர்.
அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் நிப்ராஸ் இஸ்லாமும் கொல்லப்பட்டார். நிப்ராஸின் பேஸ்புக் பக்கத்தில் ஷ்ரத்தா கபூரின் ரசிகராக அவர் தன்னை அடையாளம் காட்டியுள்ளார். மேலும் ஷ்ரத்தா கபூரை தான் சந்தித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் 8ம் தேதி பேஸ்புக்கில் அவர் ஒரு வீடியோ போட்டுள்ளார். அதில், ஷ்ரத்தா கபூருடன் அவர் கை குலுக்கியபடி நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
ஷ்ரத்தா கபூருடன் கை குலுக்கிய அற்புத தருணம்.. ஷ்ரத்தா கபூர் நீ ஒரு அழகி என்று அவர் போட்டுள்ளார். ஆனால் அவர் மலேசியாவுக்கு படிப்பதற்காகப் போன பின்னர் ஷ்ரத்தா கபூருடனான தொடர்பை விட்டு விட்டாராம்.
அவரது பேஸ்புக் பக்கத்தில் அவரைப் பற்றிய நிறைய தகவல்கள் உள்ளன. அவர் ஒரு ஜாலியான, மகிழ்ச்சியான இளைஞராக வலம் வந்துள்ளார். ஆனால் அவருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மீதான பற்று வந்த பிறகுதான் பாதை மாறியுள்ளதாக தெரிகிறது.