10 இந்தியர்களில் ஒருவருக்கு புற்றுநோய் வரும்.. 15ல் ஒருவர் உயிரிழப்பார்.. உலக சுகாதார அமைப்பு
ஜெனிவா: 10 இந்தியர்களில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், 15 பேரில் ஒருவர் புற்றுநோயால் உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் புற்று நோய் குறித்து கவலை தெரிவித்துள்ளது.
முன்பெல்லாம் புற்றநோய் என்பது அபூர்வமாக பார்க்கப்பட்ட மருந்தில்லா நோயாக இருந்தது. ஆனால் இப்போது புற்று நோய்க்கு மருந்துகள் வந்துவிட்டாலும், அந்த நோயில் இருந்து மீண்டு வருவதற்கு மிகப்பெரிய அளவில் சிகிச்சை, மற்றும் பண வசதி, மனதிடம் அதிகமாக தேவைப்படுகிறது. அத்துடன் சில புற்றுநோய்களை குணப்படுத்துவது சவாலானது கூட.
புகை பிடித்தல், மது அருந்துதல், வாயில் போதை வஸ்துகள் பயன்படுத்துதல், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் உண்பது, உடற்பயிற்சி இன்மை போன்ற மாறிய பழக்க வழக்கங்கள் காரணமாக புற்றுநோயின் தாக்கம் இப்போது மிக அதிகமாக உள்ளது. இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
புற்றுநோய் என் வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டது.. கௌதமி நெகிழ்ச்சி
புற்று நோய் விழிப்புணர்வு
இந்த சூழலில் புற்றுநோய் வராமல் தடுப்பதே மிகச்சிறந்த விஷயமாக உலக சுகாதார அமைப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதற்காக உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 4ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அந்த நாளில் மக்களுக்கு புற்று நோய் வராமல் தடுப்பதற்கான தகவல்கள் வெளியாகும்
இந்தியாவில்
நேற்று, உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் புற்றுநோய் அதிகரித்து வருவது தொடர்பாக, உலக சுகாதார அமைப்பு, தனது ஆய்வறிக்கையில் கவலையை வெளிப்படுத்தி உள்ளது. புற்றுநோயின் தாக்கம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது.
10ல் ஒருவர் பாதிப்பு
ஏனெனில் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, 'கடந்த 2018-ம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் உள்ள 135 கோடி மக்களில், 11,60,000 பேர், புதிதாக புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள். 784,800 பேர் புற்றுநோயால் இறந்துள்ளார்கள் . 2206000 பேருக்கு கடந்த 5 ஆண்டுகளில் புற்று நோய் பரவி உள்ளது.எதிர்காலத்தில் 10 இந்தியர்களில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் என்றும் கூறியுள்ளது. அத்துடன் 15 இந்தியர்களில் ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பார், என்றும் எச்சரித்துள்ளது.
வாய் புற்று நோய்
இந்தியாவில், மார்பக புற்றுநோய் 162,500 பேர், வாய்வழி புற்றுநோய் 120,000 பேர் , கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் 97,000 பேர் , நுரையீரல் புற்றுநோய் 68,000 பேர் , வயிற்று புற்றுநோய் 57,000 பேர் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் 57,000 பேர், என 2018ம் ஆண்டு நிலவரப்படி புற்றுநோயால். பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களில் 570,000 பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக , வாய்வழி புற்றுநோயில் 92,000 பேரும், நுரையீரல் புற்றுநோயில் 49,000 பேரும், வயிற்று புற்றுநோய் காரணமாக 39,000 பேரும், பெருங்குடல் புற்றுநோய் காரணமாக 37,000 பேரும், மற்றும் ஓசோஃபேஜியல் புற்றுநோய் காரணமாக 34,000 பேரும் என 45 சதவீதம் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
புற்றுநோய்கள்
பெண்களில் 587,000 பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மார்பக புற்றுநோயால் 162,500 பேரும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் 97,000 பேரும், கருப்பை புற்றுநோய் 36,000 பேரும், வாய்வழி புற்றுநோய் காரணமாக 28,000 பேரும் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் காரணமாக 20,000 பேரும் என 60 சதவீதம் பேர் புதிதாக புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாய் புற்றுநோய்
இந்தியாவில் புற்றுநோய் வருவதற்கு முத்னமையான காரணம் புகையில் பழக்கம் தான். ஆண்களுக்கு பெரும்பாலும் வாய் பகுதியிலும், பெண்களுக்கு கழுத்துப் பகுதியிலும் புற்றுநோய் ஏறபடுகிறதாக் கூறியுள்ளது. இந்தியாவில் இந்த வகை புற்றுநோய்தான் சாதாரண மக்களை அதிகம் தாக்குவதாகவும், உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. அதிக உடல் எடை, குறைந்த உடற்பயிற்சி கொண்ட பெண்களுக்கு மார்பக புற்று நோய் அதிகம் தாக்கவதாகவும் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.