சவுதி குண்டுவெடிப்பில் இந்தியர் பலி - 6 பேர் படுகாயம்
ரியாத்: சவுதி அரேபியாவில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய குண்டுவெடிப்புத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர் கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு என்பதும், அவர் சாம்தா நகரில் உள்ள செல்போன் கடை ஒன்றில் வேலை செய்து வந்ததாகவும் சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில் 3 இந்தியர்கள், 2 எகிப்தியர்கள் மற்றும் ஏமனைச் சேர்ந்த ஒருவர் என 6 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதலை அடுத்து சாம்தா நகர அரசு மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சாம்தா நகர மருத்துவமனை மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியானார்.
ஏமனில் சவுதி ஆதரவுப் படைகள் வான்வழித் தாக்குதலைக் கடந்த மார்ச் மாதம் தொடங்கின. இதை எதிர்த்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதியில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.