ஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு
டோக்கியோ: ஜப்பானின் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள இந்தியர்களில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தெரியவந்துள்ளது. இக்கப்பலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்ஹாங்கில் இருந்து ஜப்பானுக்கு 3,711 பயணிகளுடன் டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல் சென்றது. கொரோனா வைரஸ் தாக்குதலால் இக்கப்பல் ஜப்பான் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
இக்கப்பலில் பயணித்தவர்களில் 138 பேர் இந்தியர்கள். இவர்களில் முதலில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது. இது படிப்படியாக அதிகரித்து 7 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் மேலும் ஒரு இந்தியருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இக்கப்பலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்திருக்கிறது. 8 இந்தியர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த சொகுசு கப்பலில் சுமார் 600க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.