ஜெர்மனி விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு காக்பிட்டுக்கு வெளிய வைத்து பூட்டப்பட்ட விமானி
பாரீஸ்: ஜெர்மன்விங்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு விமானி அறையில் ஒரு விமானி மட்டுமே இருந்துள்ளார்.
ஸ்பெயினில் இருந்து 150 பேருடன் ஜெர்மனிக்கு சென்ற ஜெர்மன்விங்ஸ் நிறுவன விமானம் பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகினர்.
விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் விமானி அறையில் நடந்த பேச்சுவார்த்தை பதிவாகியுள்ளது. அதன்படி விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு விமானி ஒருவர் விமானியின் அறையில் இருந்து வெளியே சென்றுள்ளார்.
இது குறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
வெளியே சென்ற விமானி மீண்டும் அறைக்குள் நுழைய கதவை லேசாக தட்டியுள்ளார். ஆனால் பதில் இல்லை.
பின்னர் கதவை வேகமாக தட்டியுள்ளார். அப்போதும் பதில் இல்லை. அறைக்குள் இருந்த விமானி பதிலே அளிக்கவில்லை.
அதில் இருந்து விமானம் விழுந்து நொறுங்கியது வரை வேறு எந்த சப்தமும் பதிவாகவில்லை. அறைக்குள் இருந்த விமானி ஏன் கதவை திறந்துவிடவில்லை என்பது குழப்பமாக உள்ளது. விமானி எதற்காக அறையை விட்டு வெளியே சென்றார் என்றும் தெரியவில்லை என்றார்.
இருப்பினும் இந்த விமான விபத்திற்கு தீவிரவாதிகள் காரணமாக இருக்க முடியாது என்று பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தின் கேப்டன் 10 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.