ஆண்கள் முத்தம் கொடுத்துக்கொண்டால் எனது மகனுக்கு பிடிக்காது: அமெரிக்க நைட்கிளப் கொலையாளி தந்தை பேட்டி
வாஷிங்டன்: ஆண்கள் தங்களுக்குள் முத்தம் கொடுத்துக்கொண்டால் எனது மகனுக்கு பிடிக்காது.. இதனால்தான் ஓரின சேர்க்கையாளர்களை சுட்டு கொலை செய்திருப்பான் என்று அமெரிக்க நைட் கிளப்பில் துப்பாக்கி சூடு நடத்திய உமர் மதீனின் தந்தை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலம் ஒர்லாண்டா நகரில் பல்ஸ் என்ற பெயரில் ஓரின சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதி ஒன்று உள்ளது. அமெரிக்க நேரடிப்படி நேற்று அதிகாலை 2 மணியளவில் அங்கு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த உமர் மதீன் என்ற நபர் இயந்திர துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியால் தொடர்ந்து சுடத்தொடங்கினான்.
இதில் 50 பேர் உயிரிழந்தனர். 53 பேர் படுகாயம் அடைந்தனர். போலீசார் உமரை சுட்டு வீழ்த்தினர். விசாரணையில் அவரது பெயர், முகவரி அனைத்தும் போலீசாருக்கு தெரியவந்தது.
ஆப்கன் வம்சாவளி
உமர் மதீன் ஆப்கானிஸ்தான் வம்சாவளி பெற்றோருக்கு பிறந்தவராகும். அவரது தந்தையின் பெயர் மிர்சித்திக் மதீன். முதலில் நியூயார்க் நகரில் இவர்கள் வசித்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு போர்ட்பியர்ஸ் நகருக்கு குடிபெயர்ந்தனர்.
செக்யூரிட்டி
உமர் மதீன் 2007ம் ஆண்டிலிருந்து ஜி-4 செக்யூர் என்ற அமெரிக்காவின் முன்னணி செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அந்த நிறுவனத்தில் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தன்னுடைய கைத்துப்பாக்கி ஆகியவற்றை கொண்டு இந்த தாக்குதலை நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் செய்திகளை வெளியிடும் அமாக் என்ற அரபு செய்தி நிறுவனம் இது தங்கள் தாக்குதல் என்று குறிப்பிட்டுளளது.
தீவிரவாதி கிடையாது
ஆனால், உமர் மதீனுக்கு தீவிரவாதிகளோடு எந்த தொடர்பும் இல்லை என்று அவரது தந்தை மிர்சித்திக் கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: எனது மகன் உமர் மதீனுக்கு ஒரினச் சேர்க்கையாளர்களை பார்த்தாலே பிடிக்காது.
ஓரின சேர்க்கை பிடிக்காது
உமரின் இந்த நடவடிக்கைக்கு அவன் சார்ந்த இஸ்லாம் மதம் காரணம் அல்ல. மதத்திற்கு இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. முன்பு ஒருமுறை, மியாமி கடற்கரையில் உமர் சுற்றுப்பயணம் செய்தபோது அவனது மனைவி, குழந்தைகள் எதிரேயே ஒரினச்சேர்க்கை ஆண்கள் இருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபடி இருந்தனர். இதை பார்த்ததும் உமர் கடும் ஆத்திரம் அடைந்தான்.
காரணம் இதுதான்
இதுபற்றி அவன் ஆவேசமாக பேசினான். இவர்களையெல்லாம் சுட்டு கொல்ல வேண்டும் என்றான். எனவே ஓரினச் சேர்க்கையாளர்களை ஆரம்பம் முதலே உமர் வெறுத்துக்கொண்டிருந்தான். இதனால் தான் இப்போது ஓரினச்சேர்க்கையாளர்கள் விடுதிக்குள் புகுந்து அவர்களை சுட்டுக் கொன்றிருக்கிறான் என கருதுகிறேன், என்றார்.
தொடர்புக்கு வாய்ப்பு
ஆனால் உமர் மதீனுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என அமெரிக்க போலீசார் கருதுகின்றனர். ஏன் என்றால் அமெரிக்க புலனாய்வு போலீசார் ஏற்கனவே அவரை கண்காணித்து வந்துள்ளனர். இருமுறை அவரிடம் விசாரணையும் நடத்தியிருந்துள்ளனர்.