நைட்கிளப்பில் துப்பாக்கிச்சூடு நடத்திக் கொண்டே ஃபேஸ்புக்கில் செய்தி தேடிய கொலையாளி
ஆர்லான்டோ: ஆர்லான்டோ கிளப்பில் துப்பாக்கிச்சூடு நடத்திக் கொண்டிருக்கும்போதே ஃபேஸ்புக்கில் அது குறித்த செய்தியை உமர் மாட்டீன் தேடியது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் ஆர்லான்டோ நகரில் உள்ள பல்ஸ் ஓரினச்சேர்க்கையாளர் கிளப்புக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை புகுந்த உமர் மாட்டீன் இரவு 2 மணியில் இருந்து அதிகாலை 5 மணிவரை தொடர்ந்து 3 மணிநேரம் நடத்திய வெறியாட்டத்தில் 50 பேர் பலியாகினர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய உமரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில் உமர் பற்றி விசாரணையில் புதிய தகவல் கிடைத்துள்ளது.
ஃபேஸ்புக்
பல்ஸ் கிளப்பை தாக்கும் முன்பு உமர் ஃபேஸ்புக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பற்றி போஸ்ட் போட்டுள்ளார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இடங்களின் மீது வான்வெளி தாக்குதல் நடத்துவதற்கு பழிவாங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு
கிளப்பில் அவர் துப்பாக்கிச்சூடு நடத்தும் சம்பவம் குறித்து தகவல் தெரிந்ததும் தொலைக்காட்சி சேனல்களில் அது பற்றிய செய்திகள் ஒளிபரப்பாகின. சமூக வலைதளங்களிலும் மக்கள் அது குறித்து பரபரப்பாக பேசிக் கொண்டார்கள்.
உமர்
உமர் துப்பாக்கிச்சூடு நடத்திக் கொண்டிருக்கும்போதே தனது செல்போனில் ஃபேஸ்புக்கில் துப்பாக்கிச்சூடு, பல்ஸ் ஆர்லான்டோ என்ற வார்த்தைகளை டைப் செய்து அவர் பற்றிய செய்திகளை தேடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
போலி கணக்கு
உமர் மாட்டீனுக்கு ஃபேஸ்புக்கில் 4 முதல் 5 போலி கணக்குகள் உள்ளன. அவர் ஃபேஸ்புக்கில் ஐஸ்ஐஎஸ் அமைப்பு பற்றி பெருமையாக எழுதி வந்துள்ளார். அதிலும் குறிப்பாக துப்பாக்கிச்சூடு நடத்தும் முன்பு அந்த அமைப்பு பற்றி போஸ்ட் போட்டுள்ளார். இது குறித்து ஃபேஸ்புக் நிர்வாகம் போலீசாருக்கு விசாரணையில் ஒத்துழைப்பு அளித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.