கிரீஸில் பார்த்தாலே குமட்டும் சிறையில் குற்றவாளிகளுடன் அடைக்கப்பட்டுள்ள அகதி குழந்தைகள்
ஏதென்ஸ்: கிரீஸில் உள்ள கோஸ் தீவுக்கு அகதிகளாக வந்துள்ள ஆதரவற்ற குழந்தைகள் குற்றவாளிகள் இருக்கும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
துருக்கியில் இருந்து ஏராளமானோர் அகதிகளாக கிரீஸுக்கு வருகிறார்கள். வாரத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக வருகின்றனர். அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கிரீஸ் அரசு அவர்களுக்கு போதிய வசதி செய்து கொடுக்க முடியாமல் திணறி வருகின்றது.
கிரீஸில் உள்ள கோஸ் தீவுக்கு வரும் அகதிகள் அங்குள்ள காவல் நிலையத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். பெற்றோர்கள், உறவினர்கள் இன்றி தனியாக வரும் குழந்தைகள் கோஸ் காவல் நிலையத்தில் உள்ள அறைகளில் அடைக்கப்படுகிறார்கள். அவர்களை வேறு இடத்தில் தங்க வைக்கும் வரை அவர்கள் சிறையில் அடைத்து வைக்கப்படுகிறார்கள்.
சிறையில் குற்றவாளிகளுடன் சேர்த்து ஒரே அறையில் குழந்தைகளை அடைத்து வைக்கிறார்கள். மனித கழிவு தரையில் கிடக்க குழந்தைகளுக்கு சரியாக உணவும் வழங்குவது இல்லை என்ற குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. சில சமயங்களில் குழந்தைகள் இரண்டு நாட்கள் வரை உணவு இல்லாமல் இருக்கிறார்கள்.
அவர்களை அந்த அறைகளில் இருந்து வெளியே அழைத்துச் செல்கையில் கையில் விலங்கு போடுகிறார்கள். குழந்தைகளுக்கு தினமும் ஒரு தடவை தான் உணவு அளிக்கப்படுகிறது.
இதை குறித்து அறிந்த ஐ.நா. கிரீஸ் அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. இனிமேல் குழந்தைகளை சிறையில் அடைக்காமல் தாங்கள் நிதி வழங்கும் என்.ஜி.ஓ.வின் பொறுப்பில் விடுமாறு ஐ.நா. தெரிவித்துள்ளது.
தற்போது கோஸ் காவல் நிலையத்தில் 12 வயது முதல் 17 வரையிலான 11 குழந்தைகள் உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.