அது குடுத்தாதான் தூங்குவேன்.. அடம் பிடிக்கும் அப்பல்லோ.. ஆச்சர்யத்தில் நெட்டிசன்கள்!
தனக்கு பிடித்தமான போர்வையை போர்த்திக் கொண்டு உறங்கும் காண்டாமிருகத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
நைரோபி: வனவிலங்கு காப்பகத்தில் வளர்ந்து வரும் குட்டி காண்டாமிருகம் ஒன்று தனக்கு பிடித்தமான போர்வையை போர்த்தாவிட்டால் உறங்க மறுக்கும் வேடிக்கையான சம்பவம் கென்யாவில் நடந்துள்ளது.
பொதுவாக குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு பொருளின் மீது அதீத பிரியம் இருக்கும். அந்த பொருளை தன்னுடனே எப்போதும் வைத்திருப்பார்கள். அந்த பொருளைத் தராவிட்டால், அதை கேட்டு பிடிவாதம் பிடிப்பதை பார்த்திருப்போம்.
ஆனால் மிருகங்கள் அப்படி ஒரு பொருளின் மீது தீரா காதல் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறீர்களா? கென்யாவில் உள்ள ஒரு குட்டி காண்டாமிருகம் தனக்கு பிடித்தமான போர்வையை போர்த்திக்கொண்டு தான் எப்போதும் உறங்குகிறது.
எடப்பாடியாரும், ஸ்டாலினும் இப்படி சொல்லலியே.. அடிச்சாரு பாருங்க ரஜினிகாந்த் அந்தர் பல்டி.. தேவையா?
போர்வை
கென்யாவைச் சேர்ந்த ஷெல்ரிக் வனவிலங்குகள் அறக்கட்டளை, காட்டில் அனாதையாக விடப்பட்ட குட்டி காண்டாமிருகத்தை எடுத்து அப்பல்லோ என பெயரிட்டு வளர்த்து வருகிறது. குட்டி என்பதால் கதகதப்பிற்காக அதற்கு போர்வை போர்த்தி பழக்கி இருக்கிறது அந்த அறக்கட்டளை.
அடம் பிடிக்கும் அப்பல்லோ
இதனால் அந்த காண்டாமிருகத்திற்கு தனது போர்வை மீது ஏதோ ஒரு மோகம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அப்பல்லோவுக்கு அந்த போர்வை இல்லை என்றால் தூக்கமே வருவதில்லை. அடம்பிடித்து வாங்கியாவது அந்த குட்டி கொம்பன், போர்வையை தலை வரை போர்த்திக்கொண்டு தான் நிம்மதியாக தூங்குகிறான்.
|
வைரல் வீடியோ
குட்டி காண்டாமிருகம் அப்பல்லோ தனக்கு பிடித்தமான போர்வையை போர்த்திக்கொண்டு தூங்கும் க்யூட் வீடியோவை ஷெல்ரிக் வனவிலங்குகள் அறக்கட்டளை தனது சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நெட்டிசன்களால் இந்த வீடியோ அதிகமாகப் பகிரப்பட்டுள்ளது.
நெட்டிசன்கள் கவலை
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், குட்டி காண்டாமிருகம் நிம்மதியாக மனிதர்களைப் போலவே போர்த்திக் கொண்டு தூங்குவதைப் பார்த்து அசந்து போயுள்ளனர். அதே சமயம் மீண்டும் காட்டுக்கு சென்றால் இது போன்று போர்வையைப் போர்த்திக் கொண்டு அந்தக் காண்டாமிருகக் குட்டியால் தூங்க முடியாதே என கவலையும் தெரிவித்துள்ளனர்.