ஒசாமா வீட்டில் எடுக்கப்பட்ட ஆவணங்கள்: தோண்டத் தோண்ட 'திடுக்' தகவல்கள்
இஸ்லாமாபாத்: ஒசாமா பின் லேடன் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு எழுதிய ஆவணங்களில் உள்ள தகவல்கள் அமெரிக்காவின் ப்ருக்ளின் நகரில் நடந்து வரும் வழக்கு விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த ஆவணங்களை ஆய்வு செய்தால் கடைசி நாட்களில் ஒசாமா பாகிஸ்தானில் இருந்தது குறித்த விவரங்கள் வெளியே வரவில்லை.
ஒசாமா பின் லேடனின் மரணத்திற்கு காரணமான சூழல் குறித்த விசாரணை அப்போத்தாபாத் கமிஷனின் அறிக்கை மற்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையாளர் கார்லோட்டா கால் எழுதிய புத்தகத்தில் ஒசாமா பற்றியும், அவர் எங்கிருந்தார் என்பது பற்றியும் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐக்கு நன்கு தெரியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரில் உள்ள சப்வேயை தாக்க திட்டமிட்ட அல் கொய்தா தீவிரவாதி ஆபித் நசீர் பற்றிய வழக்கு விசாரணை தான் ப்ருக்ளின் நகர நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. அந்த விசாரணையின்போது ஒசாமா குறித்த பல்வேறு ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது.
ஒசாமா வழக்கு
ஒசமா பின் லேடன் 2002ம் ஆண்டு பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளார். அவர் ஐஎஸ்ஐ ஆட்களின் உதவியுடன் ஆப்கானிஸ்தானில் உள்ள டோரா போரா மலையில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். அவர் பாகிஸ்தானுக்கு தப்பிச் செல்ல 2001ம் ஆண்டிலேயே திட்டமிட்டுள்ளார்.
பாகிஸ்தான்
ஒசாமா பாகிஸ்தானில் உள்ள தெற்கு வசிரிஸ்தான், பஜௌர் பழங்குடியின பகுதிகளில் சில காலம் தங்கியுள்ளார். அதன் பிறகு ஸ்வாட் பள்ளத்தாக்கிற்கு சென்ற அவர் பாகிஸ்தானில் உள்ள ஹரிபூருக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது மனைவிகள், குழந்தைகள், பேரக்குழந்தைகளுடன் 2 ஆண்டுகள் இருந்துள்ளார்.
அப்போத்தாபாத்
பாகிஸ்தானின் அறிவுரைப்படி தான் ஒசாமா இஸ்லாமாபாத்தில் இருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அப்போத்தாபாத்துக்கு சென்றுள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறது. 2011ம் ஆண்டு மே மாதம் கொல்லப்படும் வரை அவர் அப்போத்தாபாத் வீட்டில் தான் தங்கியிருந்தார்.
ஐஎஸ்ஐ
ஐஎஸ்ஐ ஒசாமா பின் லேடனின் வழக்கை 2005ம் ஆண்டே கைவிட்டுவிட்டு அவரை தேடுவதை நிறுத்திவிட்டது என அப்போத்தாபாத் கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேடன்
ஒசாமா பின் லேடன் இருப்பிடம் பற்றி தெரியாது என்று கூறிய ஐஎஸ்ஐ அவரை யாரும் கண்டுபிடித்துவிடாமல் இருக்க ஒரு குழுவை நியமித்துள்ளது. அந்த குழு ஒசாமாவை பாதுகாத்து வந்துள்ளது. ஒசாமா அப்போத்தாபாத்தில் வசித்து வந்தது ஐஎஸ்ஐ தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது சுஜா பாஷாவுக்கு தெரிந்திருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
துர்ரானி
ஆப்கானிஸ்தான் விஷயத்தில் அமெரிக்காவுடன் பேரம் பேச ஐஎஸ்ஐ ஒசாமாவுக்கு பாதுகாப்பு அளித்திருக்கும் என முன்னாள் ஐஎஸ்ஐ தலைவர் ஆசாத் துர்ரானி தெரிவித்துள்ளார். ஐஎஸ்ஐக்கு ஒசாமாவின் இருப்பிடம் தெரிந்திருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.