எங்களுக்கு ஒசாமா, உங்களுக்கு ராணுவ உதவி: பாகிஸ்தானுடன் டீல் போட்ட ஒபாமா
இஸ்லாமாபாத்: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை சுட்டுக் கொன்றது பற்றி அமெரிக்கா தெரிவித்த அனைத்தும் பொய் என்று புலிட்சர் விருது பெற்ற புலனாய்வு பத்திரிக்கையாளர் செய்மோர் ஹெர்ஷ் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதும் முன்னாள் ஐஎஸ்ஐ தலைவர் ஆசாத் துர்ரானி ஒசாமாவின் கொலை பற்றி கடந்த பிப்ரவரி மாதம் கூறியதும் ஒன்றாக உள்ளது. ஒசாமாவை கொல்வதில் அமெரிக்கா, பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று துர்ரானி தெரிவித்திருந்தார். அந்த ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தான் ஒசாமாவை உயிருடன் அமெரிக்காவிடம் ஒப்படைத்திருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
துர்ரானி கூறியது போன்றே ஹெர்ஷ் தனது செய்தியில் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த செய்தியில் உள்ள தகவல்கள் உண்மை இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
துர்ரானி-ஹெர்ஷ்
ஹெர்ஷின் செய்தியில் பலரை மேற்கோள் காட்டியுள்ளது பல கேள்விகளை எழுப்புகிறது. 2006ம் ஆண்டில் இருந்து ஒசாமா அப்போத்தாபாத்தில் பாகிஸ்தான் உளவுத் துறையால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதாக ஹெர்ஷ் தெரிவித்துள்ளார். முன்னாள் பாகிஸ்தான் உளவுத் துறை அதிகாரி மூலம் ஒசாமாவின் இருப்பிடம் பற்றி அமெரிக்காவுக்கு தெரிய வந்தது.
சோதனை
அப்போத்தாபாத்தில் சோதனை நடத்த அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ராணுவம் உதவி செய்துள்ளது. ஒசாமா பற்றி துர்ரானி-ஹெர்ஷ் கூறுவதில் உண்மை உள்ளது என்று பல இந்திய அதிகாரிகள் கருதுகிறார்கள். பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டப்பட்டாலும் அந்நாட்டுக்கு அமெரிக்கா அதிக அளவில் ராணுவ உதவி செய்து வருகிறது.
அமெரிக்கா
ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து முல்லா உமர் மற்றும் பின் லேடன் ஆகியோர் குதிரையில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர் என்று அமெரிக்கா தெரிவித்தது. அப்போத்தாபாத்தில் ஒசாமா இருந்தது உலகில் யாருக்குமே தெரியாதது என்பது நம்ப முடியவில்லை.
ஒபாமா
ஒபாமா மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். ஆனால் எந்த சாதனையை கூறி மக்களிடம் வாக்கு கேட்பது என்று தெரியாமல் இருந்த அவருக்கு ஒசாமா விவகாரம் கிடைத்தது. ஒசாமாவை கொன்றதை பிரச்சாரத்தில் மீண்டும் மீண்டும் தெரிவித்து வாக்கு சேகரித்தார் ஒபாமா.
பாகிஸ்தான்
இனியும் ஒசாமாவால் எந்த பலனும் இல்லை என்று பாகிஸ்தான் நினைத்தது. ஒபாமாவுக்கு தேர்தல் நேரத்தில் பேச ஒரு விஷயம் தேவை, பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி தேவை. அதனால் ஒசாமாவை அமெரிக்காவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான்.
பலனில்லை
2004ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வந்தார் ஒசாமா. அவர் ஐஎஸ்ஐ ஆதரவுடன் பாகிஸ்தானில் இருந்து அல் கொய்தா அமைப்பை வழிநடத்தினார். 2010-2011ம் ஆண்டில் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரால் ஐஎஸ்ஐக்கு பலனில்லாமல் போனது.
படம்
ஜீரோ டார்க் தர்ட்டி தான் அப்போத்தாபாத் சோதனை பற்றி அண்மையில் வெளியான படங்களில் சிறந்தது. ஆனால் அந்த படத்தில் வரும் பல காட்சிகள் குறித்து சந்தேகம் எழுகிறது. பாகிஸ்தானியர்களுக்கே தெரியாமல் அப்போத்தாபாத்தில் அமெரிக்க விமானங்கள் பறந்தது என்பது நம்பும்படி இல்லை. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு கூட தெரியாமல் ஒசாமா வீட்டில் பல மணிநேரம் துப்பாக்கிச்சூடு நடந்தது என்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது.