பின்லேடன் உடல் மிதக்காமல் இருக்க 300 பவுண்ட் சங்கிலியை வைத்து கடலில் வீசிய அமெரிக்கா
வாஷிங்டன்: அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனின் உடலை ஒரு பையில் போட்டு அதில் 300 பவுண்ட் எடை உள்ள சங்கிலிகளை வைத்து கடலில் வீசியதாக முன்னாள் சிஐஏ தலைவர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி அமெரிக்காவில் இருந்த இரட்டை கோபுரங்களை விமானங்கள் மூலம் தாக்கி உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது அல் கொய்தா தீவிரவாத அமைப்பு. இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்த அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்கா வலை வீசித் தேடியது.
ஆப்கானிஸ்தானின் அப்போத்தாபாத்தில் பதுங்கியிருந்த ஒசாமா பின் லேடனை அமெரிக்க படையினர் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி சுட்டுக் கொன்றனர்.
உடல்
ஒசாமாவின் உடலை கடலில் அடக்கம் செய்துவிட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.
லியோன் பனேட்டா
முன்னாள் சிஐஏ தலைவரும், பாதுகாப்பு துறை செயலாளருமான லியோன் பனேட்டா தனது வாழ்க்கையை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.
வொர்தி பைட்ஸ்: எ மெமோய்ர் ஆப் லீடர்ஷிப் இன் வார் அன்ட் பீஸ் என்று தலைப்பிடப்பட்ட அந்த புத்தகத்தில் ஒசாமா பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒசாமா
ஒசாமாவின் உடலை முஸ்லிம் முறைப்படி அடக்கம் செய்ய அதை வெள்ளை துணியில் சுற்றி, அரபியில் பிரார்த்தனை செய்யப்பட்டது என்று பனேட்டா தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
சங்கிலி
ஒசாமாவின் உடலை கருப்பு நிற பையில் வைத்து அதில் 300 பவுண்ட் எடையுள்ள இரும்பு சங்கிலிகள் வைக்கப்பட்டது. உடல் மிதக்காமல் இருக்கவே சங்கிலிகள் வைக்கப்பட்டன.
கடல்
உடலை ஒரு வெள்ளை நிற மேஜையில் வைத்து அதை கப்பலின் ஓரத்தில் வைத்துள்ளனர். உடல் வைக்கப்பட்ட பை கணமாக இருந்ததால் அதோடு சேர்ந்து மேஜையும் கடலில் விழுந்தது. உடல் மூழ்கிவிட்டது ஆனால் மேஜை மிதந்தது என பனேட்டா தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.