காதலியை கொன்ற வழக்கு: பிஸ்டோரியசுக்கு 15 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்பு
பிரிட்டோரியா: தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பாரா ஒலிம்பிக் வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ். காதலியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற வழக்கில் இவருக்கு சிறை தண்டனை கிடைப்பது உறுதியாகி உள்ளது.
பாரா ஒலிம்பிக் சாம்பியனான மாற்றுத் திறனாளி பிஸ்டோரியஸின் வீட்டு குளியலறையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது காதலி ரீவா ஸ்டீன்கெம்ப், துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். இந்த வழக்கில் பிஸ்டோரியஸ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
திருடன் என்று நினைத்து துப்பாக்கியால் சுட்டதாகவும், வேண்டுமென்றே கொலை செய்யவில்லை என்றும் விசாரணையின்போது பிஸ்டோரியஸ் தெரிவித்திருந்தார். ஆனால், அரசு தரப்பில் வாதாடிய வழக்குரைஞர், துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன் வாக்குவாதம் நடந்துள்ளதாக வாதிட்டார்.
பிரிட்டோரியா உயர் நீதிமன்றத்தில் நீண்ட நாள்களாக நடைபெற்ற இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வியாழக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின், நீதிபதி தொகோஸ்லி மஸிகா, "குற்றம் சாட்டப்பட்டவர் (பிஸ்டோரியஸ்) திட்டமிட்டுக் கொலை செய்தது, சந்தேகத்துக்கு இடமின்றி போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும், கொலை செய்யும் நோக்கமின்றி மரணம் விளைவித்தாரா என்பது குறித்து, அடுத்த விசாரணையில் தெரியவரும்' எனத் தெரிவித்து, வழக்கை வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்தார்.
இந்தத் தீர்ப்பைக் கேட்டு நீதிமன்றத்தில் இருந்த பிஸ்டோரியஸ் உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விட்டு அழுதார். அவரது சகோதரி உள்ளிட்ட குடும்பத்தினர் அவரை ஆறுதல் படுத்தினர். அதேநேரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், இறுக்கமான முகத்துடன் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினர்.
பிஸ்டோரியஸ் குற்றவாளி இல்லை என்று வெளியான தீர்ப்பு, தென் ஆப்பிரிக்க சட்ட வல்லுநர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர் செய்தது திட்டமிட்ட கொலை குற்றவரம்பில் வராதது என்றாலும் ஒருவரை மரணம் அடைய செய்து உள்ளார் என்பதால் தண்டனை உண்டு என்று நீதிபதி நேற்று தெரிவித்துள்ளார்.
கொலை அல்லாத மரணம் விளைவித்த குற்றத்துக்காக பிஸ்டோரியசுக்கு அந்நாட்டு சட்டப்படி 15 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அக்டோபர் 13ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படுகிறது.