மணிக்கட்டை அறுத்து தற்கொலைக்கு முயன்றாரா ஆஸ்கர் பிஸ்டோரியஸ்?
ஜோஹன்னஸ்பர்க்: காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தென் ஆப்பிரிக்க மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ், மணிக்கட்டு அறுபட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
அவர் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் அதை ஆஸ்கர் தரப்பு மறுத்துள்ளது. கட்டிலிலிருந்து விழுந்ததில் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டு விட்டதாக ஆஸ்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பிஸ்டோரியஸ் தற்கொலைக்குத்தான் முயன்றதாகவும், அவரது அறையிலிருந்து பிளேடு துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது. ஆனால் சிறை நிர்வாகம் தரப்பில் கூறுகையில் இது சாதாரண காயம்தான். சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் ஆஸ்கர் சிறைக்குத் திரும்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது காதலி ரீவா ஸ்டீன்கெம்ப் என்பவரை கடந்த 2013ம் ஆண்டு தனது வீட்டில் வைத்து சுட்டுக் கொன்றார் பிஸ்டோரியஸ். இந்த வழக்கில் அவருக்கு ஆறு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பிஸ்டோரியஸ் என்பது நினைவிருக்கலாம்.
29 வயதான பிஸ்டோரியஸ், 2012 லண்டன் பாராலிம்பிக் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார் பிஸ்டோரியஸ். இப்படி பாராலிம்பிக் போட்டியிலும், ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்ற ஒரே தடகள வீரர் இவர் ஒருவர்தான். லண்டன் பாராலிம்பிக் போட்டியில் இவர் 6 தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.