ஈராக்கில் பிணைக்கைதிகள் போன்று வாழ்கிறோம்... கேரள நர்சுகள் கண்ணீர் பேட்டி
பாக்தாத்: பிணைக்கைதிகளைப் போன்ற வாழ்க்கை வாழ்ந்து வருவதாக ஈராக்கில் உள்ள இந்திய நர்சுகள் தெரிவித்துள்ளனர்.
ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையே உருவான மதக்கலவரம் தற்போது உள்நாட்டு போராக மாறியுள்ளது. ஷியா அரசுக்கு எதிராக சதாம் ஆதரவுப் படையான சன்னி பிரிவினரின் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே அவர்கள் மொசூல், கிர்குக், திக்ரித், சாதியா, ரமாடி சமர்ரா, ஜலாலா உள்ளிட்ட பல நகரங்களை கைப்பற்றி தங்கள் பிடியில் வைத்துள்ளனர். தலைநகர் பாக்தாத்தை கைப்பற்றுவதில் தீவிர முனைப்பாக உள்ளனர்.
இந்நிலையில், சதாம் உசேனின் சொந்த நகரமான திக்ரித்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கேரளாவை சேர்ந்த 46 நர்சுகள் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது சன்னி பிரிவினரின் கட்டுப்பாட்டில் உள்ள திக்ரித் நகரில் நர்சுகள் பாதுகாப்பாக இருப்பதாக அவர்களது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஆனபோதும், பிணைக்கைதிகள் போன்ற பரிதாபத்திற்குரிய வாழ்க்கை வாழ்ந்து வருவதாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மெரினா ஜோஸ் என்ற நர்ஸ் கூறுகையில், ‘நாங்கள் பிணைக்கைதிகள் போன்ற நிலையில் உள்ளோம். சிறையிலடைக்கப்பட்டது போன்ற நிலையில் வாழ்ந்து வருகிறோம். கட்டிடங்களை விட்டு வெளியேற முடியாத நிலையில் முடங்கிக் கிடக்கிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈராக்கை சேர்ந்த அரசு ஊழியர்களோ, ராணுவத்தினரோ இங்கு இல்லை என்று தெரிவித்த அவர், தங்கள் குடும்பத்தினரை கூட தங்களால் தொடர்புகொள்ள இயலாமல் தவித்து வந்ததாகவும், பின்னர் செஞ்சிலுவை அமைப்பினர் உதவியால் தங்கள் சிம்கார்டை ரீசார்ஜ் செய்யப் பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதோடு, ஈராக்கில் தவிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக அவர்களது குடும்பத்தோடு இணைய மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் பிரதமர் மோடிக்கு கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
ஈராக்கில் சுமார் பதினெட்டாயிரம் இந்தியர்கள் பணி நிமித்தம் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.