திடீரென வங்கதேசத்தின் மீது பார்வையை திருப்பும் அமெரிக்கா.. என்ன காரணம்!
டாக்கா: கொரோனாவிற்கு மருந்து உள்பட பல உதவிகள் செய்து வங்கதேசத்தை தன் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் சீனா தீவிரமாக இறங்கி உள்ள நிலையில், அமெரிக்காவின் கவனம் வங்கதேசத்தின் மீது திரும்பி உள்ளது. அமெரிக்காவின் துணை வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்டீபன் பீகன் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று வங்கதேசம் செல்கிறார்.
கொரோனா தொற்றுநோயை சமாளிக்க வங்கதேசத்திற்கு உதவுவதற்காக சீன நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அமெரிக்க அரசின் முக்கிய பிரதிநிதி டாக்கா வருவது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் வங்கதேசத்தில் பல முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை சீனா தான் மேற்கொண்டு வருகிறது. கொரோனா நிலைமையை சமாளிக்கவும் ஒரு மருத்துவ குழுவை டாக்காவிற்கு சீனா அனுப்பி உள்ளது. அத்துடன் சீனாவின் சினோவாக் பயோடெக் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதனைகளை மேற்கொள்ள வங்கதேசத்தின் அனுமதியையும் சீனா பெற்றுள்ளது. 3 ஆம் கட்ட மனித பரிசோதனையை சீனா மேற்கொள்ளலாம் என ஆகஸ்ட் 27 அன்று வங்கதேசம் அறிவித்தது.
சீனா வங்கதேச தொடர்பு
சீனாவிற்கும் வங்கதேசத்திற்கு இடையிலான தீவிரமான இந்த தொடர்புகள் இந்திய அரசியல் தலைவர்கள் உள்பட பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கனவே கிழக்கு லடாக்கில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சீனா- வங்கதேசம் இடையிலான நட்பு மற்றும் உறவுகள் இந்தியாவை கவலைக்கு உள்ளாக்கி உள்ளது.
அச்சத்தில் அமெரிக்கா
அமெரிக்காவும் இதை கவனத்தில் கொண்டுள்ளது. எப்படியும் தன் பக்கம் வங்கதேசத்தை ஈர்க்க வேண்டும் என்று அமெரிக்கா ஆர்வம் காட்டுகிறது. சீனாவின் பல்வேறு திட்டங்கள், செயல்களால் வரும் காலத்தில் அந்த நாடு தனக்கு எதிராக திரும்பும் என்ற அச்சத்தில் உள்ள அமெரிக்கா, மற்ற நாடுகளுடன் சீனா செய்யும் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பதிலடியான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
டாக்கா தூதரகம் விளக்கம்
அந்த வகையில் தான் வங்கதேசத்திற்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக அமெரிக்காவின் அரசு பிரதிநிதி இன்று செல்கிறார். துணை வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்டீபன் பீகன் வருகை குறித்து டாக்காவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில். "வங்கதேசத்தில் அமெரிக்க வெளியுறவு துணைச் செயலாளரின் ஈடுபாடானது, அனைவருக்குமான, சுதந்திரமான, திறந்த, அனைத்தையும் உள்ளடக்கிய, அமைதியான மற்றும் பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைப் பற்றிய நமது பொதுவான நோக்கத்தில் முக்கிய கவனம் செலுத்த வருகிறார். அத்துடன் கொரோனா சிகிச்சை மற்றும் கொரோனா தடுப்பு முயற்சிகளில் அமெரிக்கா- வங்கதேச ஒத்துழைப்பு குறித்தும், நிலையானபொருளாதார வளர்ச்சி குறித்து பேச வருகிறார் என்று கூறியுள்ளது.
தன் பக்கம் வங்கதேசம்
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தன்னுடைய முக்கிய பங்காளியாக வங்கதேசத்தை நெருங்கி வர வைக்க வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் விருப்பமாக உள்ளது தெளிவான அறிகுறியாகவே மூத்த அமெரிக்க அதிகாரியின் வருகை உள்ளது. ஒபாமா அதிபராக இருந்த போது, 2016 ம் ஆண்டு, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரியின் வருகைக்குப் பின்னர் வங்கசேதத்திற்கு, எந்த அமெரிக்க உயர் அதிகாரிகளும் வந்தது இல்லை. இப்போதுதான் முதல்முறையாக முக்கிய அதிகாரி வர உள்ளார்.
முக்கிய பேச்சு நடத்த வாய்ப்பு
அமெரிக்க வெளியுறவு துறை துணை செயலாளர் பீகனின் வங்கதேசத்திற்கு வந்த பின்னர், இந்தியாவிற்கும் வர வாய்ப்பு உள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பேச வாய்ப்பு உள்ளது. முன்னதாக அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் பகுதி கூட்டணி நாடுகள் வரிசையில் வங்கதேச்தை நெருக்கமாக இழுக்கும் முயற்சியை கடந்த சில வாரங்களாக அமெரிக்கா தீவிரப்படுத்தி உள்ளது.
இப்போது வங்கதேசத்துடன் பேச்சு
அமெரிக்காவின் மூத்த அரசு அதிகாரி எஸ்பர் செப்டம்பர் 11 அன்று பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பேசினார், இந்தோ-பசிபிக் மூலோபாயத்தின் கட்டமைப்பிற்குள் இரு தரப்பினரும் ஒத்துழைப்பு குறித்து பேசினார்கள் செப்டம்பர் மாதம் மாலத்தீவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முடித்த பின்னர் இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடான வங்கதேசத்தின் மீது அமெரிக்கா கவனம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது.
ஸ்டீபன் பீகன் பேட்டி
இதனிடையே அண்மையில் பேசிய வெளியுறவுத்துறை துணை செயலாளர் ஸ்டீபன் பீகன் "கிட்டத்தட்ட ஒவ்வொரு களத்திலும் சீனாவை பின்னுக்கு தள்ளுவதே எங்கள் உத்தி. நாங்கள் அதை பாதுகாப்பு விவகாரங்களில் செய்கிறோம். இந்தியா-சீன எல்லையில் உள்ள இந்தியாவின் கால்வான் பள்ளத்தாக்கில் இருந்த போதும் சரி. தென் பசிபிக் பகுதியில் சரி, மற்ற நாடுகள் தங்களின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கை அடிப்படையில் நாங்கள் இதைச் செய்கிறோம், " என்றார்.