பிலிப்பைன்ஸ் நாட்டில் ஹையான் புயலால் 100 க்கும் மேற்பட்டோர் பலி
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய ஹையான் புயலுக்கு 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள சமர் தீவு அருகே கடலில் ஹையான்' என்ற பயங்கர புயல் உருவாகி மிரட்டியது. இந்த தீவு தலைநகர் மணிலாவில் இருந்து 600 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.
ஹையான் புயல் நேற்று கரையை கடக்கும் என்றும் மணிக்கு 235 கிலோ மீட்டர் முதல் 275 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனால் சமர், லெய்தே தீவுகள் உள்பட 20 மாகாணங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அங்கு வசிக்கும் சுமார் 12 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
மேலும் விமானம், கப்பல் போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டன. இந்த புயல் நேற்று அதிகாலை 5 மணி அளவில் சமர் தீவில் கரையை கடந்தது. அப்போது அதிகபட்சமாக 315 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி வீசியது.
இந்த புயலால் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என்று பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.