சூடான் நாட்டில் டேங்கர் லாரி வெடித்து 100 பேர் பலி... கச்சா எண்ணெயை பிடிக்கச் சென்ற போது பரிதாபம்
ஜூபா: சூடான் நாட்டில் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 100 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
சூடான் நாட்டில் மேற்கு ஈகோட்ரியா எனும் இடத்திலிருந்து, தெற்கு சூடானுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி சென்ற ஒரு டேங்கர் லாரி ஒன்று திடீரென சாலையை விட்டு விலகி நிலைதடுமாறி கவிழ்ந்தது. அந்த லாரியில் இருந்து வெளியேறிய எண்ணெயை பிடிப்பதற்காக அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.
அப்போது திடீரென அந்த லாரி வெடித்து சிதறியது. இதில் அங்கு திரண்டிருந்த மக்களில் 100 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த மக்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை மோசமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அஞ்சப் படுகிறது.
இந்த விபத்து குறித்து சூடான் ஜனாதிபதியின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில் ‘மேற்கு ஈகோட்ரியா என்ற இடத்தில் இருந்து தெற்கு சூடானுக்கு சாலை வழியாக நீண்ட நேரம் சென்ற ஆயில் டேங்கர் லாரி திடீரென சாலையை விட்டு விலகி மக்கள் கூட்டத்தில் புகுந்து வெடித்து சிதறியது. இதில் அங்கிருந்த மக்கள் 100 பேர் பலியானார்கள். மேலும் 50 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.