கிரீஸில் 700 அகதிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 340 பேர் மீட்பு.. 104 உடல்கள் கரை ஒதுங்கின !
திரிபோலி: ஆப்பிரிக்காவிலிருந்து கிரீஸ் நாட்டுக்கு சென்ற அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 104 அகதிகளின் உடல்கள் லிபிய நாட்டு கடற்கரையில் ஒதுங்கியுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் விபத்தில் சிக்கிய 340 பேர் ஹலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் கூறியுள்ளனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஈராக், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடல் கடந்து செல்லும் அகதிகள் ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர்.
இவர்கள் மத்திய தரைக்கடல் பகுதியை தாண்டும் போது சில நேரங்களில் படகுகள் பழுதாகி விடுகின்றன. மேலும் அளவுக்கு அதிகமான அகதிகள் ஒரே படகில் பயணம் செய்வதால் விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதம் ஏற்படுகிறது.
ஒரு சிலர் தப்பித் தவறி மற்ற நாடுகளுக்கு நுழையும் போது உரிய உரிமம் இல்லாமல் அந்நாட்டு போலீசாரின் நடவடிக்கைக்கு உள்ளாகி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. இந்நிலையில், ஆப்பிரிக்காவிலிருந்து கிரீஸ் நாட்டுக்கு சுமார் 700 அகதிகள் ஒரு படகில் சென்றனர். இந்தப் படகு கிரேட் என்ற தீவு அருகே சென்றபோது, கடலில் கவிழ்ந்தது.
இதுதொடர்பான தகவல் அறிந்ததும், கிரீசில் இருந்து மீட்புக்குழுவினர் விரைந்த வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலோர ரோந்து கப்பல்கள், ராணுவ விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் 340 பேர் மீட்கப்பட்டனர். பலரைக் காணவில்லை.
இந்நிலையில் 104 பேரின் சடலம் லிபிய கடற்கரையில் ஒதுங்கி உள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. அளவுக்கு அதிகமான ஆட்கள் ஏற்றப்பட்டிருந்ததால், சுமை தாங்காமல் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.