13,000 இணையதளங்களை முடக்கி இருக்கும் சீனா.. மக்களை சமாளிக்க சொல்லும் காரணம் என்ன?
சீனாவில் கடந்த இரண்டு வருடத்தில் மட்டும் மொத்தமாக 13,000 இணையதளங்கள் முடக்கப்பட்டு இருக்கிறது.
பெய்ஜிங்: சீனாவில் கடந்த இரண்டு வருடத்தில் மட்டும் மொத்தமாக 13,000 இணையதளங்கள் முடக்கப்பட்டு இருக்கிறது. சீன அரசின் இந்த சர்வாதிகாரம் மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பல காலமாகவே சீனாவில் கடும் இணையதள கட்டுப்பாடு இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு வருடமாக மிகவும் மோசமாக கட்டுப்பாடுகள் அதிகரித்து இருப்பதாக சீன மக்கள் வருத்தம் தெரிவித்து இருக்கின்றனர்.
உலகில் இருக்கும் மற்ற 95 நாடுகளில் இருக்கும் இணையதள வளர்ச்சி இன்னும் சீனாவை எட்டிப்பார்க்க கூட இல்லை என்று கூறப்படுகிறது.
எந்த இணையமும் இல்லை
இந்தியாவிலும் மற்ற உலக நாடுகளிலும் இருப்பது போல அல்லாமல் சீனாவின் இணையதள உபயோகத்தின் மீது கடுமையான சட்டங்கள் இருக்கிறது. நாம் பயன்படுத்துவது போல அங்கு கூகுள், பேஸ்புக் பயன்படுத்த முடியாது. சீனாவில் வீடியோ காலில் தொடங்கி பேஸ்புக் போன்ற அனைத்திற்கும் தனி இணையதளங்கள் இருக்கிறது. இதில் முக்கால்வாசி சீனா அரசின் நேரடி கண்காணிப்பில் இருக்கிறது.
முடக்கம்
2012ல் ஸீ ஜின்பிங் சீன அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து இந்த கட்டுப்பாடு அதிகரித்து இருக்கிறது. மிக முக்கியமாக கொஞ்சம் கொஞ்சமாக இணையதளங்கள் மூடப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் சீனாவில் 13,000 இணையத்தளங்களும், 1 கோடி மக்களின் சமூக வலைதள கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன
அதீத இணையதள பயன்பாடும், பொய்யான தகவல்களும் இதற்கு முக்கிய காரணம் என்று சீன அரசு கூறியுள்ளது. மேலும் இந்த இணையதளங்கள் மக்களை தீமையான திசைக்கு அழைத்து செல்கின்றன, அதன் காரணமாகவே இவை முடக்கப்பட்டு இருக்கிறது என்று சீன அரசு தெரிவித்து இருக்கிறது. அதேபோல் இணையத்தில் நடக்கும் தவறுகளும் இதனால் குறைந்துள்ளதாக சீனா தெரிவித்து இருக்கிறது.
வேறு காரணம்
சீனா ஆளும் அரசின் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்க கூடாது என்பதற்காகவே இப்படி எல்லாம் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்டமும், தடையும் மக்களின் பேச்சுரிமையை பாதிப்பதாகவும் சீன மக்கள் தெரிவித்து இருகின்றனர்.