நிலநடுக்கத்தில் 6,300 பேர் பலி; 2 லட்சத்து 50 ஆயிரம் கட்டிடங்கள் சேதம் – சீரமைக்க ரூ.13000 கோடி தேவ
காத்மண்டு: நேபாளத்தில் கடந்த சனிக்கிழமையன்று ( ஏப்ரல் 25) தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு இதுவரை6,300 பேர்வரை பலியாகியுள்ளதாகவும், 2 லட்சத்து 50,000 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பூகம்பத்தால் இடிந்த வரலாற்று சின்னங்களை மீண்டும் மறுசீரமைக்க 2 பில்லியன் டாலர் (சுமார் ரூ.13 ஆயிரம் கோடி) வரை செலவாகும் என முதற்கட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நேபாள நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேபாளத்தை தாக்கிய பயங்கர நிலநடுக்கத்தால் நாடு முழுவதும் 1.4 குடியிருப்புகள், அலுவலகங்கள், கோயில்கள் என கட்டிடங்கள் வரையில் முற்றிலுமாக தரைமட்டமாகின.
இவற்றில் 1,38,182 வீடுகள் முற்றிலும் தரைமட்டமாகின. 1,22,694 வீடுகள் ஓரளவு சேதமடைந்துள்ளன. 10394 அரசுக் கட்டடங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிட்டன. 13,000 அரசு அலுவலகங்கள் பாதி சிதிலமடைந்து காணப்படுகின்றன.
6300 பேர் பலி
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,300 ஆக அதிகரித்திருக்கிறது. நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 நிதியுதவி வழங்கப்படும்" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் நில அதிர்வுகள்
கடந்த 25ஆம் தேதி 7.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இன்னமும் அங்கு நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இன்று காலையும், 4.2 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
துர்நாற்றம் அதிகரிப்பு
பூகம்பம் ஏற்பட்டு 6 நாட்களுக்கு மேலாகியுள்ள நிலையில், தலைநகர் காட்மாண்டுவை சுற்றியுள்ள பகுதிகளில் இடிபாடுகளுக்குள் இருந்து துர்நாற்றம் அதிகமாக வீசி வருகிறது. இதனால் இடிபாடுகளுக்குள் யாரும் உயிரோடு உள்ளனரா? என்பதை கண்டுபிடிக்க நெருங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
மீட்கப்படும் சடலங்கள்
இந்த துர்நாற்றத்தால் அப்பகுதியில் பாதிப்பு ஏற்படாத வீடுகளிலும் மக்கள் வசிக்க முடியாமல், திறந்த வெளிகளிலேயே காலத்தை கடத்துகின்றனர். எனவே இந்த பகுதிகளில் இருந்து மீட்கப்படும் பிணங்களை உடனே எரியூட்டுமாறு மீட்புப்படையினர் உத்தரவிட்டு உள்ளனர்.
இறுதிச்சடங்குகளுக்கு நிதி
பூகம்பத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் இழப்பீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் உயிரிழந்தோரின் இறுதிச்சடங்குகளுக்கு தலா ரூ.40 ஆயிரமும், லேசான சேதமடைந்த வீடுகளின் பராமரிப்புக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
அடிப்படை வசதிகள் இல்லை
காட்மாண்டுக்கு வடகிழக்கே உள்ள சட்டாரா பகுதியில் சுமார் 80 சதவீத கட்டிடங்கள் இடிந்துள்ளன. இந்த பகுதியில் மீட்புப்பணிகள் மந்தகதியிலேயே நடந்து வருகின்றன. மேலும் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு தேவையான தண்ணீர், உணவு போன்ற அத்தியாவசிய பொருட்கள் சென்று சேரவில்லை.
கோபத்தில் மக்கள்
குறிப்பாக பெரும் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் ஒன்றான கோர்காவில் நூற்றுக்கணக்கான மக்கள் சிறிதளவு உணவு மற்றும் பொருட்களுடன் திறந்த வெளிகளில் வசிக்கின்றனர். தங்களுக்கு போதுமான உணவு கிடைக்காததால் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் அரசு மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர்.
நேபாள அரசு திணறல்
இந்த மக்களுக்கு உணவு வினியோகிக்க போதுமான ஹெலிகாப்டர்கள் இல்லாமல் நேபாள அரசு திண்டாடுகிறது. தற்போது 20க்கும் மேற்பட்ட சர்வதேச ஹெலிகாப்டர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், மேலும் அதிக ஹெலிகாப்டர்களை அனுப்புமாறு சர்வதேச நாடுகளை நேபாள அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இருப்பிடம், உணவு, தண்ணீர்
நேபாளத்தில் சுமார் 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ள ஐ.நா., இதில் குறைந்தது 20 லட்சம் பேருக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான கூடாரம், தண்ணீர், உணவு மற்றும் மருந்து பொருட்கள் தேவைப்படுவதாக கூறியுள்ளது.
ரூ.13000 கோடி தேவை
பூகம்பத்தால் இடிந்து விழுந்த வீடுகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வரலாற்று சின்னங்களை மீண்டும் கட்டியெழுப்பி மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 2 பில்லியன் டாலர் (சுமார் ரூ.13 ஆயிரம் கோடி) வரை செலவாகும் என முதற்கட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக நேபாள அரசு அறிவித்து உள்ளது. இதற்கு சர்வதேச நன்கொடையாளர்கள் உதவ வேண்டும் என நேபாள நிதி மந்திரி ராம் சரண் மகத் கூறியுள்ளார்.
எனினும் தொலைதூர பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முடியவில்லை என்றும், அந்த பகுதிகளில் ஆய்வுப்பணிகள் பின்னர் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.