இந்தோனேஷியாவில் பழிக்கு பழியாக ஒரே நேரத்தில் வெட்டி சாய்க்கப்பட்ட 300 முதலைகள்
இந்தோனேஷியாவில் சக மனிதர் ஒருவரை முதலைகள் கடித்து கொன்றதால் 300 முதலைகளை கொன்று குவித்துள்ளனர் கிராம மக்கள்.
Recommended Video
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் சக மனிதர் ஒருவரை முதலைகள் கடித்து கொன்றதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 300 முதலைகளை கொன்று குவித்துள்ளனர்.
இந்தோனேஷியாவில் பப்புவா என்ற மாநிலம் உள்ளது. அங்குள்ள சோராங் நகரில் மிகப்பெரிய முதலைப்பண்ணை செயல்பட்டு வருகிறது.
குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே இருப்பதால், இந்தப் பண்ணையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் பண்ணை உரிமையாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
புல் அறுத்த போது
ஆனால், தொடர்ந்து அந்தப் பண்ணை செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் 48 வயதான சுகிட்டோ என்பவர், முதலைப்பண்ணைக்கு அருகே இருக்கும் புல்வெளிப்பகுதியில் புற்கள் அறுத்துக்கொண்டிருந்தார்.
முதலை பண்ணைக்குள் ஓடினார்
அப்போது, அங்கு வந்த முதலை ஒன்று சுகிட்டோவின் காலைக் கடித்துள்ளது. முதலையிடம் இருந்து தப்ப நினைத்த சுகிட்டோ முதலைப் பண்ணைக்குள் ஓடினார்.
இரையாக்கி கொண்ட முதலைகள்
அப்போது மற்ற முதலைகள் அவரை கடித்து கொன்று இரையாக்கி கொண்டன. இதையறிந்த ஊர் மக்கள் போலீஸாரிடம் முதலை பண்ணையை இடமாற்றம் செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.
பயங்கர ஆயுதங்களுடன்
ஆனால் இதனை காதில் போட்டுக்கொள்ளாத பண்ணை நிர்வாகம் இழப்பீடு தருவதாக கூறி சமாளித்தது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று சுகிட்டோவின் இறுதிச்சடங்கை முடித்த கையோடு கத்தி, அரிவாள், கோடரி என பயங்கர ஆயுதங்களுடன் முதலைப் பண்ணைக்குள் புகுந்தனர்.
வெட்டி சாய்க்கப்பட்ட முதலைகள்
பின்னர் கண்ணில்பட்ட முதலைகளையெல்லாம் அவர்கள் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் பண்ணையில் இருந்த 300 முதலைகள் கொல்லப்பட்டன.
பழிக்கு பழியாக கொலை
இதையடுத்து அந்த முதலைப் பண்ணை மூடப்பட்டது. சக மனிதரை கடித்துக்கொன்றதற்காக 300 முதலைகளை கொன்று பழித்தீர்த்துள்ளனர் அப்பகுதி மக்கள். குட்டிகள் பெரிய முதலைகள் என எதனையும் விடவில்லை கிராம மக்கள்.
கிராம மக்கள் மீது வழக்கு
இது குறித்து பண்ணை நிர்வாகத்தினர் போலீஸிடம் புகார் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்ட போலீஸார், முதலைகள் கொல்லப்பட்டு குவியலாகக் கிடக்கும் காட்சியைப் பார்த்து கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.