அரசின் அனுமதியின்றி தேர்தல்... 50 ஜனநாயகவாதிகள் கைது... ஹாங்காங்கில் என்னதான் நடக்கிறது?
ஹாங்காங்: புதிய தேசியப் பாதுகாப்பு சட்டத்தை மீறியதாகக் கூறி ஹாங்காங்கில் 50 செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹாங்காங் கடந்த 1997ஆம் ஆண்டு வரை பிரிட்டன் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அதைத்தொடர்ந்து சுதந்திரம் பெற்ற ஹாங்காங், சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற பகுதியாக உள்ளது.
ஹாங்காங்கின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளை மட்டுமே சீனா கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற அனைத்து துறைகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹாங்காங் அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இருப்பினும், இந்த அரசு சீனாவின் கைப்பாவையாக மாறியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தேசிய பாதுகாப்பு சட்டம்
இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும் சட்டங்களைச் சீனா தொடர்ந்து இயற்றி வருவதாக குற்றச்சாட்டுகள் வலுத்துள்ளன. கடந்த ஜூன் மாதம் முன்பு கூட ஹாங்காங் தேசியப் பாதுகாப்பு சட்டத்தைச் சீனா நிறைவேற்றியது. இதன் மூலம் ஹாங்காக்கின் தேசியப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளைச் சீனா விசாரிக்க முடியும்.
ஜனநாயகவாதிகள் கைது
இந்நிலையில், ஜனநாயகவாதிகளுக்கு பெரும் பின்னடைவாகத் தேசியப் பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக ஹாங்காங்கில் பல ஜனநாயகவாதிகள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் முன்னாள் ஹாங்காங் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் டூ, லாம் சியூக் டிங் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரணம் என்ன
கைது செய்யப்பட்டவர்கள் குறித்த தகவல்களை ஹாங்காங் காவல் துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. கடந்தாண்டு அரசின் எச்சரிக்கையையும் மீறி, ஒப்புதலின்றி ஹாங்காங் நகரச் சட்டப்பேரவை தேர்தலை நடத்தி, அதில் வாக்களித்ததற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன,
ஜனநாயகவாதிகள் திட்டம்
70 இடங்களைக் கொண்ட ஹாங்காங் நகரச் சட்டப்பேரவையைக் கைப்பற்றுவதன் மூலம், அரசின் நடவடிக்கைகளை முடக்க முடியும் என்று ஜனநாயகவாதிகள் கருதினர். மேலும், இதன் மூலம் ஜனநாயக சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான அழுத்தத்தையும் அதிகரிக்க முடியும் என்று சில ஜனநாயகவாதிகள் அப்போது பொதுவெளியில் உரையாற்றினர். இவை அனைத்தும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாக அரசு தற்போது தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக அத்தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.