பஞ்சம்...பசி...பட்டினி - உள்நாட்டுப் போரால் தத்தளிக்கும் 7,600 சூடான் குடும்பங்கள்!
கர்துாம்: ஆப்ரிக்க நாடான தெற்கு சூடானில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் நடந்து வரும் உள்நாட்டு சண்டையின் காரணமாக 7,600 குடும்பங்கள் பட்டினியால் தவிக்கின்றன.
அங்கு தொடர்ந்து நடைபெறும் மனித உரிமை மீறல்களால், மனிதாபிமான உதவிகளை செய்து வந்த தொண்டு நிறுவனங்களும் பணியை தொடரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
"ஆப்ரிக்காவின் இருதயம்" என அழைக்கப்படும் சூடான் நாட்டிலிருந்து 2011 ஜூலை 9 ஆம் தேதி பிரிந்து தெற்கு சூடான் உருவானது. இது உலகின் 196 ஆவது நாடாக ஐ.நா.சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
எத்தியோப்பியா, காங்கோ, கென்யா, உகாண்டா ஆகிய நாடுகள் இதன் எல்லைகளாக உள்ளன. இதன் பரப்பளவு 2,47,000 சதுர கி.மீ, 2008ம் ஆண்டு கணக்கின் படி இந்நாட்டின் மக்கள் தொகை 82 லட்சம். எழுத்தறிவு 15 சதவீதம். நாட்டின் மொத்த வருவாயில் 98 சதவீதம் எண்ணெய் மூலம் கிடைக்கிறது.
இந்நிலையில் தற்போது அதிபராக இருக்கும் சல்வா கிர், முன்னாள் துணை அதிபரும், தற்போது கிளர்ச்சியாளர்களின் தலைவராக இருக்கும் ரிக் மச்சார் ராணுவப் புரட்சி செய்து ஆட்சியை பிடிக்க சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டினார்.
இதையடுத்து அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை துவங்கியது. இது உள்நாட்டு போராக மாறியது. குழந்தைகளைக் கூட இருதரப்பும் சண்டையில் ஈடுபடுத்தியது. உள்நாட்டு போரின் காரணமாக மக்களுக்கு அடிப்படை வசதிகளான உணவு, நீர், இருப்பிடம் கூட கிடைக்கவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகிள்ளனர்.மேலும் இந்த உள்நாட்டு சண்டையால் 19 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற நேர்ந்தது. 45 லட்சம் பேருக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என ஐ.நா அறிக்கை தெரிவிக்கிறது.