1% பணக்காரர்களிடம் 73% சொத்து.. இதுதான் இந்திய பொருளாதார நிலை.. அம்பலப்படுத்தும் ஆக்ஸ்பேம்!
கடந்த ஆண்டில் மட்டும் நாட்டின் 73 சதவீத சொத்துகள் 1 சதவீத பணக்காரர்களிடம் மட்டுமே உள்ளதாக சர்வதேச அமைப்பான ஆக்ஸ்பேம் ஹவர்ஸ் முடிவு இதனை கூறுகிறது.
Recommended Video
டேவோஸ் : நாட்டின் 73 சதவீத சொத்துக்கள் 1 சதவீத பணக்காரர்களிடமே உள்ளதாக சர்வதேச அமைப்பான ஆக்ஸ்பேட் ஹவர்ஸ் சர்வே கூறுகிறது. மேலும் 67 சதவீத மக்களின் வருவாய் 1 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளதாகவும், இந்திய பொருளாதாரத்தால் ஏழை பணக்காரர்களிடையேயான விகிதாச்சார வித்தியாசம் அதிக அளவில் இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
சுவிட்சர்லாந்தின் டேவோஸில் உலக பொருளாதார குறித்து விவாதிக்கும் சர்வதேச நாடுகளின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டேவோஸ் சென்றுள்ள நிலையில் சர்வதேச அமைப்பான ஆக்ஸ்பேம் ஹவர்ஸ், இந்திய பொருளாதாரம் குறித்த ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இந்தியாவின் 73 சதவீத சொத்துக்கள் 1 சதவீத பணக்காரர்களிடம் தான் உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்திய பொருளாதாரத்தில் உள்ள வருவாய் சமநிலை இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என்று சர்வே சொல்கிறது. மேலாளரின் வருவாயை எட்ட வேண்டுமெனில் இந்தியாவில் இருக்கும் கடை நிலை ஊழியர் சுமார் 941 ஆண்டுகள் உழைக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டுகிறது ஆய்வறிக்கை.
ஏழை பணக்காரர்கள் இடைவெளி அதிகரிப்பு
நாட்டில் மொத்தமுள்ள மக்கள் தொகையில் 67 கோடி பேரின் வருவாய் ஒரு சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. அதாவது 50 சதவீத மக்களின் வருவாய் என்பது 1 சதவீதமே உயர்ந்துள்ளது. ஆனால் 1 சதவீத பணக்காரர்களிடம் 73 சதவீத சொத்து சேர்ந்திருப்பது இந்தியாவில் ஏழை பணக்காரர்களின் இடைவெளி எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
பட்ஜெட் அளவிற்கு சமமான சொத்து
இதில் மற்றொரு அதிர்ச்சியான விஷயம் 1 சதவீத பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ. 20 லட்சத்து 90 ஆயிரம் கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பணக்காரர்களின் வருமானம் இந்தியாவின் ஒட்டுமொத்த பட்ஜெட்டிற்கு சமமானது.
பணக்காரர்களின் சொத்து மட்டுமே அதிகரிப்பு
இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் இதேநிலை தான் உள்ளது. கடந்தாண்டில், சர்வதேச அளவில் ஈட்டப்பட்ட 82 சதவீத சொத்துக்கள், 1 சதவீத மக்களிடம் சென்று சேர்ந்துள்ளன. கடந்தாண்டு ஆய்வின்படி, நாட்டின் 1 சதவீத மக்களிடம் உள்ள 58 சதவீத சொத்துக்கள் இருந்ததாகவும், அது தற்போது 20.9 லட்சம் கோடிகள் அதிகரித்து 1 சதவீத மக்களிடம் 73 சதவீத சொத்துக்கள் உள்ளன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
இந்தியாவிற்கு அறிவுரை
ஆக்ஸ்பேம் இந்திய அரசுக்கு ஏழை பணக்காரர்களிடையே நிலவும் ஏற்ற இறக்கங்களை களைய சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது. இதன்படி மக்களின் வாழ்க்கைத் தரம் உயர அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும், விவசாயத்தில் முதலீடு செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. இதே போன்று தற்போதைய திட்டங்களில் சமூக பாதுகாப்பு அளிக்கும் அம்சங்களை இணைக்க வேண்டும் என்றும் ஆக்ஸ்பேம் ஆலோசனை கூறியுள்ளது.
இந்திய பொருளாதார நிலை
பணக்காரர்கள் மட்டுமே அதிகரிப்பது நல்ல பொருளாதாரத்திற்கான அடையாளம் அல்ல, இது பொருளாதார தோல்வியையே வெளிக்காட்டுவதாக ஆக்ஸ்பேம் குட்டு போட்டுள்ளது. கடின உழைப்பாளிகள், உணவிற்காகவும், அடிப்படை வசதிகள் இன்றியும், தங்களின் குழந்தைகளின் கல்வி செலவுக்கு நிதி கிடைக்காமலும் அல்லாடி வருகின்றனர். ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு என்பதே போராட்டமாக இருக்கும் நிலையில் குடும்பத்தினருக்கு மருத்துவ வசதிகள் செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும் ஆக்ஸ்பேம் கூறியுள்ளது.