பிகாசோவின் ‘உமன் ஆப் அல்ஜியர்ஸ்’ ஓவியம்... ரூ.1148 கோடிக்கு ஏலம் போய் சாதனை
நியுயார்க்: உலகப் புகழ் பெற்ற ஓவியர் பிகாசோவின் ஓவியம் ஒன்று ரூ. 1148 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட ஓவியம் என்ற பெருமையை இந்த ஓவியம் பெற்றுள்ளது.
உலகப் புகழ் பெற்ற ஓவியர் பாப்லோ பிகாசோ. தற்போது இவர் உயிரோடு இல்லாவிட்டாலும், இவரது ஓவியங்கள் உயிரோட்டத்துடன் காலங்களைக் கடந்து வாழ்ந்து வருகின்றன.
அந்தவகையில், 1955ல் பிகாசோ வரைந்த ஓவியம் ‘உமன் ஆப் அல்ஜியர்ஸ்'. இந்த அழகிய ஓவியம் நியூயார்க் கிறிஸ்டி ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. இது 140 மில்லியன் டாலருக்கு ( சுமார் 896 கோடி ரூபாய் ) தான் ஏலம் போகும் என்று எதிர்பாக்கப்பட்டது. ஆனால், ஏலத்தின் முடிவில் அந்த ஓவியம் 179.3 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1148 கோடி ஆகும்.
இதன் மூலம் உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட ஓவியம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
இதற்கு முன் பிரான்சிஸ் பேக்கன் என்ற ஓவியர் தீட்டிய " திரீ ஸ்டடீஸ் ஆப் லூசியன் பிராட் " என்ற ஓவியம் 142 மில்லியன் டாலருக்கு ( சுமார் 866 கோடி ரூபாய் ) 2013 ம் ஆண்டு ஏலம் விடப்பட்டது.