மருத்துவ நோபல் பரிசு வென்றவரின் மனைவி இந்தியர்!
Recommended Video
ஹூஸ்டன்: மருத்துவத்துக்கான நோபல் பரிசு வென்றுள்ள அமெரிக்கர் ஜேம்ஸ் ஆலிசனின் மனைவி பத்மானி சர்மா, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.
2018ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஆலிசன் மற்றும் ஜப்பானின் டசகு ஆகியோர் இணைந்து இதைப் பெறுகின்றனர். இருவரும் புற்றுநோய் சிகிச்சையில் புதிய உத்தியைக் கண்டுபிடித்தமைக்காக இந்த விருதைப் பெறுகின்றனர்.
இந்த நோபல் பரிசில் இந்தியர்களுக்கும் ஒரு சின்ன சந்தோஷம் உள்ளது. அதாவது ஆலிசனின் மனைவி வம்சாவளி இந்தியர் ஆவார். இவரும் ஒரு புற்று நோய் சிகிச்சை நிபுணர்தான். ஆலிசனும், பத்மானியும் ஹூஸ்டனில் உள்ள எம்ஜி ஆண்டர்சன் புற்று நோய் கழகத்தில் பணியாற்றுகின்றனர்.
பத்மானியும் ஒரு புற்றுநோய் சிகிச்சை நிபுணர்தான். இவரது பூர்வீகம் மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள கயானா ஆகும். இவரது வம்சவாளி இந்தியா. பெற்றோரில் தந்தை இந்தியர், தாயார் கயானாவைச் சேர்ந்த முஸ்லீம் ஆவார். 10 வயது வரை குடும்பம் கயானாவில் வசித்தது. அதன் பிறகு குடும்பத்துடன் நியூயார்க்குக்கு இடம் பெயர்ந்தார் பத்மானி. அதன் பிறகு அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றார்.
ஆலிசனும் சரி, பத்மானியும் சரி புற்றுநோய் சிகிச்சை மருத்துவத்தில் சிறந்து விளங்குபவர்கள். இருவரும் ஒரே மருத்துவமனையில் பணியாற்றுவதோடு, இருவரும் இணைந்து பல்வேறு ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளனர். பல்வேறு புகழ் பெற்ற மருத்துவக் குழுக்களில் இடம் பெற்றுள்ளனர்.
[ சபரிமலை செல்ல விரும்பும் பெண்களை தடுக்க முயல்கிறதா தேவசம் போர்டின் புதிய விதிமுறைகள்? ]
ஆலிசனின் குடும்பத்தில் ஒரு பெரும் சோகம் உண்டு. அவரது தாயார் புற்று நோய்க்குப் பலியானவர் ஆவார். அதேபோல ஆலிசனின் சகோதரரும் புற்றுநோய்க்கு இரையானவர். இதுவும் கூட ஆலிசனை, புற்றுநோய் சிகிச்சை குறித்த ஆய்வுகளில் ஈடுபடத் தூண்டியதாம்.
உலகின் மிகப் பெரிய மிரட்டலாக இன்று உருவெடுத்து நிற்கிறது புற்றுநோய். அதன் ஒழிப்பு மற்றும் சிகிச்சையில் முன்னோடிகளாக உள்ள தம்பதி ஆலிசன்- பத்மானி. இந்த வகையில் இந்தியராக நாமும் கூட பெருமை கொள்ளலாம்.