ஓரமாய் போய் உட்காருங்க இம்ரான் கான்.. சரிந்து கிடக்கும் பொருளாதாரம்.. களம் இறங்கிய பாக். ராணுவ தளபதி
இஸ்லாமாபாத்: பொருளாதார சரிவு என்பது இந்தியாவை மட்டுமல்ல பக்கத்து நாடானா பாகிஸ்தானையும் படாய்படுத்தி வருகிறது. கடுமையாக சரிந்துகிடக்கும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்காக அந்நாட்டின் ராணுவ தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா, தொழில்அதிபர்களை அழைத்து விவாதித்து உள்ளார்.
பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இம்ரான் கான் அரசு இருக்கும் போது, பாகிஸ்தான் ராணுவ தளபதியே பொருளாதார பிரச்சனைகளை தொழில்அதிபர்களுடன் விவாதித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தினாலும் அந்த ஊர் மக்கள் அதை ஆதரிப்பது தான் ஆச்சர்யமான உண்மை.
பாகிஸ்தான் நம் இந்தியாவை போல் கிடையாது. வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்து சென்ற 1947 முதல் தற்போது வரை அதாவது 72 வருட காலத்தில் ராணுவம் தான் பாதி ஆண்டுகள் ஆட்சி நடத்தி உள்ளது. பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைவிட அதிக அதிகாரம் மிக்கதாக ராணுவம் உள்ளது.
யார் செய்தாலும் தலையீடு
இதன் காரணமாக பாகிஸ்தானில் யார் ஆட்சி செய்தாலும் ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஆட்சியில் தொடர முடியும். அரசின் ஒவ்வொரு முக்கிய சீர்திருத்த நடவடிக்கையிலும் ராணுவத்தின் தலையீடு நிச்சயம் இருக்கும்.
ராணுவ தளபதிக்கு பதவி
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு ராணுவத்துடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்து இருந்தார். இதன்படி ராணுவ தளபதி கமர் ஜாவேத் பாஜ்வாவுடன் நட்பு பாராட்டி வரும் இம்ரான் கான் , அவருக்கு மூன்று ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்கி இருந்தார்.
பட்ஜெட் பற்றாக்குறை
இது ஒரு புறம் எனில், பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது. பாகிஸ்தானில் உள்நாட்டு உற்பத்தி கடுமையாக சரிந்துள்ளளது. இதனால் பட்ஜெட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.9 சதவிகிதமாக பற்றாக்குறை அதிகரித்து உள்ளது.
தொழில் அதிபர்களுடன் தளபதி
இதையடுத்து பாகிஸ்தானில் சரிந்துகிடக்கும் பொருளாதாரத்தை சரிசெய்யவும், முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும் விரும்பிய அந்நாட்டு ராணுவ தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா, தொழில்அதிபர்களை அழைத்து விவாதித்து உள்ளார்.
கேள்விகள் கேட்ட தளபதி
ராவல் பிண்டி, கராச்சி உள்பட ராணுவ தலைமையகங்கள் உள்பட மூன்று இடங்களில் தொழில்அதிபர்களை சந்தித்தும், பொருளாதார நிபுணர்களை சந்தித்தும் ஆலோசனை நடத்தி உள்ளார். தொழில் அதிபர்களிடம் பொருளாதாரத்தை சரிசெய்வது எவ்வாறு, முதலீடுகளை அதிகரிக்க எது வழிவகுக்கும் உள்ளிட்ட கேள்விகளை கேட்டுள்ளார். அப்போது நடந்த விவாதங்களுக்கு பின்னர் அரசின் அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவுகளையும் வழிகாட்டுதல்களையும் ராணுவ தளபதி பிறப்பித்தாக செய்திகள் வெளியாகி உள்ளன.