வெறும் 15 வயசுதான்.. இந்து சிறுமியை கடத்தி.. மதமாற்றம் செய்து.. திருமணமும் செய்த பாகிஸ்தான் இளைஞர்!
கடத்தப்பட்ட 15 வயது சிறுமியை போலீசார் மீட்டுள்ளனர்
கராச்சி: வெறும் 15 வயசுதான்... இந்து மதத்தை சார்ந்த சிறுமியை கடத்தி... மதமாற்றம் செய்து... வலுக்கட்டாயமாக கல்யாணமும் செய்துள்ளனர்.. பாகிஸ்தானில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சிந்து மாகாணத்தில் உள்ள ஜக்கப்பாத் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய்குமார்... இவரது மகள் மிஹக் குமாரி.. 15 வயது சிறுமி.. அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவருகிறார்.
இந்நிலையில், அந்த பகுதியில் வசித்துவரும் அலி ரசா சோலாங்கி என்பவர் குமாரியை கடந்த 15-ம் தேதி கடத்தி சென்றுள்ளார்.. பிறகு அச்சிறுமியை முஸ்லிம் மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்து.. அந்த பெண்ணின் சம்மதமே இல்லாமல் கல்யாணமும் செய்துள்ளார்.
இதை பற்றி தகவலறிந்து குமாரியின் தந்தை விஜய்குமார், தன் மகளை அலி ரசா மீது கடத்தி மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொண்டதாகவும், மகளை மீட்டு தரும்படியும் போலீசில் புகார் தந்தார்.. அதனடிப்படையில் போலீசார் குமாரியை மீட்டதுடன் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து, குமாரியை பெண்கள் போலீஸ் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைக்க கோர்ட் உத்தரவிட்டதுடன், சிறுமியின் உண்மையான வயதை கண்டறியும்படியும், அந்த அறிக்கையை வரும் 3-ம் தேதி தாக்கல் செய்யும்படியும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிந்து சிறுபான்மையினர் நல விவகாரங்கள் துறை அமைச்சர் ஹரி ராம் கிஷோரி லால் சிறுமியின் குடும்பத்தினருக்கு முழு ஆதரவு தருவதாக உறுதி தெரிவித்துள்ளார்.. மேலும் 18 வயதை எட்டாத சிறுமிக்குத் திருமணம் செய்திருப்பது சட்டப்படி குற்றம் என்றும், சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினரான இந்துக்கள் அதிகம் வசிக்கும் சிந்து மாகாணத்தில், இந்து பெண்களை இப்படி தொடர்ந்து கடத்திச்சென்று கட்டாய மதமாற்றத் திருமணம் செய்வது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.