போர், ஆமா போர்.. அக்கப்போர் செய்யும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்
இஸ்லாமாபாத்: ஜம்மு-காஷ்மீரின் நிலைமை "தற்செயலான போரை" ஏற்படுத்தும் அபாயங்கள் இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி மிரட்டும் தொனியில் வாய் சவடால் விட்டுள்ளார்.
பாகிஸ்தானும் இந்தியாவும் சண்டையால் ஏற்படும் விளைவுகளை புரிந்துகொள்கின்றன. ஆனால் "தற்செயலான போருக்கு" வாய்ப்பு இருப்பதை புறம்தள்ள முடியாது என்று அவர் மேலும் கூறினார்.
காஷ்மீரில் இதே நிலைமை தொடர்ந்தால், பின்னர் எதுவும் நடக்கலாம், என்றும் குரேஷி சவடால் விட்டுள்ளார்.
துணைக்கு பாகிஸ்தான்
மேலும் அவர் கூறியதை பாருங்கள்: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான தூதர், மைக்கேல் பேச்லெட் காஷ்மீர் பிராந்தியத்தை, பார்வையிட ஆர்வமாக உள்ளார். சுயநிர்ணய உரிமைக்கான நியாயமான போராட்டத்தில் காஷ்மீர் மக்கள் தனியாக இல்லை, பாகிஸ்தான் தங்களது காஷ்மீர் சகோதரர்களுக்கு தார்மீக, அரசியல் மற்றும் ராஜதந்திர ஆதரவைத் தொடர்ந்து அளிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பலன் கிடைக்கவில்லை
காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசமயமாக்குவதற்கான தீவிர முயற்சிகளை பாகிஸ்தான், எடுத்தபோதிலும், அதில் பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான், போர்.. ஆமா போர்.. என அவ்வப்போது மிரட்டுவதாக நினைத்து பாகிஸ்தான் அமைச்சர்கள் கிச்சுகிச்சு மூட்டி வருகிறார்கள்.
கிச்சுகிச்சு
பாகிஸ்தானின் தற்போதைய நிதி நிலைமையையும், அந்த நாட்டுக்கு பெரும்பாலான உலக நாடுகள், ஆதரவு அளிக்கவில்லை என்பதையும் வைத்து பார்க்கும்போது, பாகிஸ்தான் எச்சரிக்கைகள் கிச்சுகிச்சு மூட்டுவதை போல இருக்கிறது என்று சொல்வதில் யாருக்கும் தயக்கம் இருக்கப்போவதில்லை. ஐக்கிய நாடுகள் சபையிலும், அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகள் போலவே பாகிஸ்தானுக்கு நெகட்டிவ் பதில்தான் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
போர் பதற்றம்
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை வாபஸ் பெறுவதற்கான அரசியலமைப்பின் 370 வது பிரிவின் விதிகளை இந்தியா ரத்து செய்து அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்த பின்னர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவச் செய்ய, பாகிஸ்தான் கடும் முயற்சிகளை எடுத்து வருவதாக, இந்திய உளவுத்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.