குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனை வழக்கு.. சர்வதேச நீதிமன்றத்தில் பாக். மறு சீராய்வு மனு !
இஸ்லாமாபாத்: குல்பூஷன் ஜாதவ் வழக்கில், சர்வதேச நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மறு விசாரணை செய்யக் கோரி பாக்கிஸ்தான் மனு செய்துள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் மரண தண்டனை விதித்தது.
இதையடுத்து, ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மனு தாக்கல் செய்தது. இதனை பரிசீலித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
அதன்பின்னர் கடந்த 15ஆம் தேதி விசாரணை தொடங்கியது. அப்போது, ஜாதவ் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்று இந்தியா தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், வியன்னா ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி பாகிஸ்தான் செயல்பட்டிருப்பதால், ஜாதவை விடுதலை செய்ய
உத்தரவிட வேண்டும் என்றும் இந்தியா வேண்டுகோள் விடுத்தது.பாகிஸ்தான் தரப்பில் வாதாடும்போது, இந்தியாவின் முறையீடு தேவையற்றது என்று குற்றம்சாட்டப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், குல்பூஷன் யாதவ் மரணதண்டனையில் பாகிஸ்தான் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியது.
2008ம் ஆண்டு சட்டவிதிகள்படி பாகிஸ்தான் ஆதராங்கள் போதுமானதாக இல்லை என்று பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், குல்பூஷன் ஜாதவ் தூக்கு தண்டனையை ஆகஸ்ட் மாதம் வரை தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இறுதி தீர்ப்பு வழங்கும் வரை பாகிஸ்தான் குல்பூஷண் ஜாதவை தூக்கிலிடக்கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை மறுவிசாரணை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், இந்த வழக்கை ஆறு வாரத்துக்குள் விசாரிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளது. குல்பூஷன் ஜாதவ் தொடர்பான இந்த வழக்கில் பாகிஸ்தான் அரசு, வழக்கறிஞர்கள் அணியில் மாற்றம்செய்துள்ளது.