ஒரு பக்கம் “பனாமா லீக்ஸ்” சர்ச்சை... மறுபக்கம் லண்டனில் சிகிச்சை - நவாஸ் ஷெரீப்பின் பயண பின்னணி!
லண்டன்: சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் வெளியிட்ட பனாமா பேப்பர்களில் நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் பெயர்களும் இடம்பெற்றுள்ள நிலையில் அவர் திடீரென லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பனாமா நாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில் பெரிய அளவில் ரகசிய முதலீடுகளையும், வங்கி டெபாசிட்டுகளையும் குவித்துள்ளதாக சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு "பனாமா லீக்ஸ்" என்ற பெயரில் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்ட தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
அதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் பெயர்களும் இடம் பெற்றிருந்தது, அந்த நாட்டில் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அதை நவாஸ் ஷெரீப் மறுத்தார். இருப்பினும் அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதன்பேரில் நீதி விசாரணை நடத்தப்படும் என நவாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் நவாஸ் ஷெரீப் திடீரென நேற்று முன்தினம் லண்டனுக்கு புறப்பட்டு சென்றார். அவர் அங்கு ஒரு வார காலம் தங்கி இருந்து மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வார் என தகவல்கள் கூறுகின்றன. அவருக்கு நீண்ட காலமாக இதயத்தில் பிரச்சினைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நிசார் அலி கான் கூறும்போது, "பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த சில வருடங்களாகவே இதய கோளாறுகளால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த 2, 3 மாதங்களாக அவர் மிகவும் கஷ்டப்படுகிறார். ஏற்கனவே லண்டனில் சிகிச்சை பெற முடிவு செய்து, அங்குள்ள மருத்துவ நிபுணர்களிடம் நேரம் ஒதுக்கப்பெற்றிருந்தும் அதன்படி செல்ல முடியாமல் போய் விட்டது. இப்போது நான் ஆலோசனை கூறியதின்பேரில் அவர் லண்டன் செல்ல சம்மதித்தார்" என்று தெரிவித்துள்ளார்.