வாசிம் அக்ரம் மீது துப்பாக்கிச் சூடு நடந்த விவகாரம்... ஒருவர் கைது
கராச்சி: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வாசிம் அக்ரம் மீது நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
குவைதாபாத்தில் உள்ள தெளத் செளரங்கி பகுதியில் உள்ள வீட்டில் வைத்து இந்த நபரைப் போலீஸார் கைது செய்துள்ளனர் என்று கராச்சி கிழக்கு டிஐஜி முனீர் அகமது ஷேக் கூறியுள்ளார்.
சம்பவ நாளன்று நடந்த துப்பாக்கிச் சூட்டின்போது துப்பாக்கியால் சுட்ட நபர்கள் பயணித்த காரை இவர்தான் ஓட்டியுள்ளார் என்றும் முனீர் அகமது ஷேக் கூறினார்.
கராச்சியில் கடந்த புதன்கிழமையன்று தேசிய ஸ்டேடியத்தில் நடந்து வரும் இளம் வேகப் பந்து வீச்சாளர்களுக்கான பயிற்சி முகாமை மேற்பார்வையிடுவதற்காக வாசிம் அக்ரம் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கர்ஸாஸ் என்ற பகுதியில் அவருடைய கார் வந்தபோது, பின்னால் வந்த ஒரு கார், அக்ரம் காரில் மோதி விட்டது. இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்தது. அப்போது அக்ரமை நோக்கி பின்னால் வந்த காரில் இருந்தவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு அக்ரமின் கார் மீது பாய்ந்தது. அக்ரம் உயிர் தப்பினார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு கூட்டம் கூடி விட்டது. உடனடியாக அந்த மர்மக் காரில் வந்தவர்கள் அங்கிருந்து வேகமாக கிளம்பிப் போய் விட்டனர். இதையடுத்து போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில் கார் டிரைவர் சிக்கியுள்ளார். துப்பாக்கியால் சுட்ட நபரையும் அடையாளம் கண்டு விட்டதாகவும், அவரும் கைது செய்யப்படுவார் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் அக்ரம் மன ரீதியாக பாதிக்கப்பட்டாலும் கூட தொடர்ந்து அவர் இளம் வீரர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.