ருஷ்டியின் கருத்துகளை ஆதரிக்கிறதாம்... ‘நான் மலாலா’ புத்தகத்திற்கு பாக். பள்ளிகளில் தடை
இஸ்லாமாபாத்: ‘நான் மலாலா' புத்தகத்தில் முகம்மது நபிக்கு எதிரான கருத்துக்களாக சல்மான் ருஷ்டியின் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு முக்கியத்துவம் தரும் கருத்துகளும் இடம் பெற்றிருப்பதால், அப்புத்தகம் பாகிஸ்தானில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் பாடப்புத்தகமாக மற்றும் நூலகங்களில் பயன் படுத்தத் தடை விதிக்கப் பட்டுள்ளது.
பாகிஸ்தான் சிறுமியான மலாலா, பெண் கல்வியை ஊக்குவித்ததற்காக தாலிபன்களால் சுடப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைகளுக்குப் பிறகு லண்டன் பள்ளியில் கல்வி பயின்று வருகிறார்.
இவர் தனது சுய சரிதையை ‘நான் மலாலா' என்ற பெயரில் எழுதினார். இதற்கான உரிமையைப் பெற இங்கிலாந்தை சேர்ந்த வெயிடென்பெல்ட் அண்ட் நிகோல்சன் பதிப்பகம் மலாலாவிடம் 15 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது.
நான் மலாலா....
இங்கிலாந்து நூலாசிரியர் கிரிஸ்டினா லாம்ப் எழுதியுள்ள 'நான் மலாலா' என்ற 276 பக்க புத்தகம் உலக நாடுகளில் கடந்த மாதம் விற்பனைக்கு வந்தது.பாகிஸ்தானில் கூட இந்த புத்தகம் ரூ.595க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தடை....
ஆனால், தற்போது அப்புத்தகத்தில் முகம்மது நபி பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம் பெற்றிருப்பதாகக் கூறி பாகிஸ்தானில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் ‘நான் மலாலா'விற்கு தடை விதித்து உத்தரவிடப் பட்டுள்ளது.
பெண் கல்வி....
இது குறித்து அனைத்து பாகிஸ்தான் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் மிர்சா காஷிப் அலி கூறியிருப்பதாவது, ‘பாகிஸ்தானில் உள்ள பள்ளிகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
பெண் ஆசிரியைகள்....
கோடிக்கணக்கான மாணவிகளுக்கு சுமார் 7 லட்சம் ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பகுதியினர் பெண் ஆசிரியைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைப் பகுதி....
மலாலா எழுதிய புத்தகத்தில் சல்மான் ருஷ்டியின் கருத்துகளுக்கு வலுசேர்க்கும் வகையிலான சர்ச்சைக்குரிய பகுதிகள் இடம் பெற்றுள்ளன.
பள்ளிகளில் தடை...
எனவே, பாகிஸ்தானில் இயங்கும் சுமார் 1/2 லட்சம் பள்ளிகளின் பாடதிட்டமாகவோ, கட்டுரை தொடர்பான போட்டிகளிலோ, பள்ளி நூலகங்களிலோ அந்த புத்தகத்தை பயன்படுத்திக் கூடாது என்று நாங்கள் தடை விதித்துள்ளோம்.
மதரீதியானத் தாக்குதல்....
பெண்களும் கல்வி கற்று அதிகாரம் பெறுவதை உறுதிபடுத்துவதற்காக நாங்கள் முழு மூச்சுடன் பாடுபட்டு வருகிறோம். அதற்காக, மேற்கத்திய சக்திகளின் தூண்டுதலின்படி எங்கள் மத நம்பிக்கையின் மீது கடுமையான தாக்குதல் தொடுத்துள்ள மலாலாவின் புத்தகத்தை எங்கள் பள்ளிகளில் அனுமதித்து விட முடியாது' எனத் தெரிவித்துள்ளார்.
தாலிபன்கள் மிரட்டல்...
ஏற்கனவே, மலாலாவின் புத்தகக்களை விற்கும் கடைகளுக்கு தாலிபன்கள் கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.