கராச்சி சீன தூதரகம் மீதான தாக்குதல் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு!
Recommended Video
கராச்சி: பாகிஸ்தானின் கைபர் பாக்தூன்குவா மாகாணத்தில் நடத்தப்பட்ட பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் 30 பேர் கொல்லப்பட்டனர். 40 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஜுமா பஜார் பகுதியில் தொழுகைக்காக வந்திருந்த ஷியா முஸ்லீம்களை குறி வைத்து, இந்த கொடூர தாக்குதலை தீவிரவாதிகள் நிகழ்த்தி உள்ளனர். நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்த பகுதியில், இருசக்கர வாகனத்தில் வந்த தீவிரவாதி உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். இதில் 30 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 40 க்கும் மேற்பட்டோர் கவலைகிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே நேரத்தில் சீன துணைத் தூதரகத்திலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.
கராச்சி நகரில் உள்ள கிளிப்டன் பிளாக் 4 பகுதியில், சீன துணைத் தூதரகம், குவைத், ரஷ்ய தூதரகம் மற்றும் பள்ளிகள், உணவு விடுதிகள் உள்ளன. இந்தநிலையில், இன்று காலை ஆயுதங்களுடன், சீன துணைத் தூதரகத்திற்குள் நுழைய முயன்ற நான்கு பேரை, அங்கு பாதுகாப்பில் இருந்த காவலர்கள் தடுத்தி நிறுத்தினர். அப்போது தீவிரவாதி ஒருவன், திடீரென தனது உடலில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில் இரண்டு காவலர்கள் உயிரிழந்தனர்.
இதனையடுத்து, மற்ற மூன்று தீவிரவாதிகள் சீன துணைத் தூதரகத்திற்குள் நுழைய முயன்றனர். ஆனால், முன்னெச்சரிக்கையாக நுழைவு வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டது. இருப்பினும், தீவிரவாதிகள் சீன துணைத் தூதரகத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, பாதுகாப்பு படையினர், இரண்டு மணி நேர துப்பாக்கிச் சண்டைக்கு பிறகு, மூன்று தீவிரவாதிகளையும் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனிடையே, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை பாதுகாப்பு படையினர், அப்பகுதியில் இருந்து மீட்டுள்ளனர். தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதால், நடக்கவிருந்த பெரிய சதி திட்டம் முறியடிக்கப்பட்டது.
சீன துணைத் தூதரகத்தில் இருந்த அதிகாரிகள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, சீனா இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.