மலாலாவை துப்பாக்கியால் சுட்ட 10 தாலிபான் தீவிரவாதிகளுக்கும் ஆயுள் தண்டனை
இஸ்லாமாபாத்: பெண் கல்விக்காக குரல் கொடுத்ததற்காக பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்சாயை சுட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கைச் சேர்ந்த பள்ளி மாணவி மலாலா யூசப்சாய் பெண் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். கடந்த 2012ம் ஆண்டு மலாலா பள்ளி வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வாகனத்தை மறித்த தாலிபான் தீவிரவாதிகள் மலாலாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் தலையில் குண்டுபாய்ந்த மலாலா முதலில் பாகிஸ்தானிலும் பின்னர் இங்கிலாந்திலும் சிகிச்சை பெற்று குணமடைந்தார். பெண் கல்விக்காக குரல் கொடுத்த காரணத்திற்காக தாக்கப்பட்ட மலாலா அந்த சம்பவத்தை அடுத்து இங்கிலாந்தில் குடியேறினார்.
இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தானில் உள்ள தாலிபான் அமைப்பைச் சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து 10 தாலிபான் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
மலாலா தாக்குதல் பற்றிய வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த 10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. ஆனால் இந்த தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட அதாவுல்லா கான்(23) என்பவரின் பெயர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 10 பேர் கைதான விவரத்தை கடந்த செப்டம்பர் மாதம் தான் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. ஆனால் அவர்கள் எங்கு, எப்பொழுது கைது செய்யப்பட்டார்கள், அவர்கள் தான் தாக்குதலில் ஈடுபட்டவர்களா என்ற விவரத்தை தெரிவிக்க ராணுவம் மறுத்துவிட்டது.
தண்டனை விதிக்கப்பட்டோர் பட்டியலில் மலாலாவை தாக்கியதாக மக்கள் அடையாளம் காட்டியவர்களின் பெயர்கள் இல்லை.