சம்பள பாக்கி கேட்ட எலக்ட்ரீசியன் மீது சிங்கத்தை ஏவி விட்ட நபர்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி
Recommended Video
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சம்பள பாக்கியை கேட்ட எலக்ட்ரீசியனுக்கு பணம் தராமல் இழுத்தடித்த வழிபாட்டுத் தளத்தின் பராமரிப்பாளர், தான் வளர்த்து வரும் சிங்கத்தை ஏவி விட்டுள்ளார். இதில் எலக்ட்ரீசியன் படுகாயம் அடைந்தார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ஷாஹ்த்ராவில் இமாம்பர்கா சதா-இ-இமாம் உசேன் என்ற வழிபாட்டுத் தலத்தின் பராமரிப்பாளராக உள்ளவர் அலி ரஸா. இவர்
இமாம்பர்கா வழிபாட்டு தலத்தில் மின்சாதன வேலைகளை செய்யும்படி முகமது ரபீக் என்ற எலக்ட்ரீசியனை கேட்டுக்கொண்டார். முகமது ரபீக்கும் மின்சாதன வேலைகள் அனைத்தையும் கடந்த செப்டம்பரில் முடித்துக் கொடுத்தார்.
சப்தம் போட்டார்
ஆனால் அலி ரஸா, எலக்ட்ரீசியன் முகமது ரபீக்குக்கு வேலை பார்த்ததுக்கு ஒரு குறிப்பிட்ட சம்பள தொகையை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதை கேட்டு கேட்டு பார்த்து சலிப்படைந்த ரபீக், அலி ரஸாவிடம் கடந்த செப்டம்பர் மாதம் 9;ம் தேதி நேரில் சென்று சப்தம் போட்டுள்ளார்.
கடும் வாக்குவாதம்
அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அலி ரஸா தான் வளர்த்து வந்த சிங்கத்தை முகமது ரபீக் மீது ஏவி விட்டுள்ளார்.
சிங்கம் கடித்தது
இதை சற்றும் எதிர்பார்க்காத முகமது ரபீக் அதிர்ச்சி அடைந்து அலறினார். சிங்கம் பாய்ந்து சென்று கடித்து குதற தொடங்கியது. நல்ல வேளையாக அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து முகமது ரபீக்கை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தற்போது வெளியே தெரிந்த நிலையில், அலி ராஸா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். இப்போது வரை அலி ராஸா,அந்த எலக்ட்ரீசியனுக்கு பணம் கொடுக்கவில்லை.
தகவல் இல்லை
இந்நிலையில் எலக்ட்ரீசியன் முகமது ரபீக்கை கடித்த சிங்கத்தை வளர்க்க ரஸாவுக்கு வனத்துறை தொடர்ந்து அனுமதி கொடுத்துள்ளதா அல்லது அந்த சிங்கம் வனத்துறையே கொண்டு சென்றதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இதேபோல் சிங்கத்தின் நிலை குறித்தும் எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை.