நகைக்கடைக்குள் புகுந்து “ஆசிட்” ஊற்றிய மர்ம நபர்கள் – பாகிஸ்தானில் 4 பெண்கள் படுகாயம்
குவெட்டா: பாகிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா நகரில் முகம் தெரியாத மர்ம மனிதர்கள் 4 பெண்களின் மீது ஆசிட் வீச்சு நடத்திய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள ஷரியப் சாலையில் எப்போதும் பரபரப்பாக இயங்கும் மார்க்கெட் அமைந்து உள்ளது. இந்நிலையில் நேற்று மோட்டார் சைக்கிள்களில் ஆயுதம் தாங்கிய மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்களில் 2 பேர் முகத்தை துணியால் மூடி மறைத்து இருந்தனர்.
திடீரென்று அக்கும்பல் ஒரு நகை கடைக்குள் புகுந்தது. அங்கு இருந்த பெண்கள் மீது ஊசியில் நிரப்பப்பட்டிருந்த ஆசிட்டை பீய்ச்சி அடித்தனர். அதில் 4 பெண்கள் காயம் அடைந்தனர்.
அவர்களில் 2 பேருக்கு கைகளிலும், 2 பேருக்கு முகத்திலும் காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக போலான் மெடிக்கல் காம்ப்ளெக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசியது ஏன் என தெரியவில்லை. அவர்களுக்கும், தங்களுக்கும் முன்விரோதம் எதுவும் இல்லை என பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். ஆசிட் மூலமாக பெண்களை சிதைத்தல் பாகிஸ்தானில் சர்வசாதரணமாக நடைபெற்று வருகின்றது.
பலுசிஸ்தானின் தலைநகரான குவெட்டா ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.