நீங்களே இருங்கள்.. நிலைமை சரி இல்லை.. பாக். ராணுவ தளபதியின் பதவி நீட்டிப்பு.. பின்னணி இதுதான்!
பாகிஸ்தானில் ராணுவத் தளபதி கமர் ஜாவீத் பாஜ்வாவின் பதவிக்காலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ராணுவத் தளபதி கமர் ஜாவீத் பாஜ்வாவின் பதவிக்காலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான உறவு தற்போது நாளுக்கு நாள் பிரச்சனையாகிக் கொண்டே செல்கிறது. அதிலும் காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதில் இருந்தே இந்த பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது.
காஷ்மீர் பிரச்சனையில் போர் ஏற்பட கூட வாய்ப்புள்ளதாக உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்தான் பாகிஸ்தானில் ராணுவத் தளபதி கமர் ஜாவீத் பாஜ்வாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எப்படி இவர்
58 வயதாகும் இவர் நவம்பர் மாதத்துடன் ஓய்வு பெற வேண்டும். இவர் முன்னாள் பிரதமர் முஷரப் மூலம் நியமிக்கப்பட்டவர். ஆனால் பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி இவரின் பணி மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தங்கள் பகுதியிலும் ஆசியாவிலும் நிலவும் பாதுகாப்பற்ற தன்மை காரணமாக இவரின் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது.
என்ன நீட்டிப்பு
ஏற்கனவே இம்ரான் கான் பிரதமர் ஆனதற்கு பின் ராணுவத்தின் ஆதரவு இருக்கிறது. அவர் ராணுவத்தின் பொம்மை பிரதமராக மட்டுமே இருப்பார் என்று பேச்சுக்கள் வந்தது. தற்போது அதற்கு ஏற்றபடியே ராணுவத் தளபதி கமர் ஜாவீத் பாஜ்வாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அட மோசம்
இவர்தான் இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து அதிரடியாக சவால்களை விட்டு வருகிறார். அதாவது இந்தியா எங்கள் மீது தாக்கினால் நாங்கள் திருப்பி தாக்க தயாராக இருக்கிறோம். இந்தியாவிற்கு எதிராக நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வதற்கு தயாராக இருக்கிறோம். படைகளை தயார் நிலையில் வைத்து இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
கவனம்
அதேபோல் இவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் அமெரிக்கா சென்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இம்ரான் கான் டிரம்ப் இருவரும் நடத்திய சந்திப்பில் கமர் ஜாவீத் பாஜ்வா உடன் இருந்தார். அப்போதே இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதில் இருந்து இவர் உலக அரங்கில் கவனம் பெற்று வருகிறார்.