நவாஸ் ஷெரீப்புடன் ராணுவ தளபதி திடீர் சந்திப்பு- பதவி விலக வலியுறுத்தல்?
இஸ்லாமாபாத்: பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப் பதவி விலகும்படி பாகிஸ்தான் ராணுவ தளபதி நேரில் சந்தித்து வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதை பாகிஸ்தான் அரசும் ராணுவமும் மறுத்துள்ளன.
நவாஸ் ஷெரீப் பதவி விலகக் கோரி இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியும், மதகுரு தாஹிர் உல் காத்ரியின் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சியும் இணைந்து தீவிர போராட்டத்த்தை நடத்தி வருகின்றன. இதனால் தலைநகர் இஸ்லாமாபாத் போர்க்களமாக காட்சி தருகிறது.
இந்த கலவரம் லாகூர், கராச்சி நகரங்களுக்கும் பரவி உள்ளது. ஆனால் நவாஸ் ஷெரீப் பதவி விலகப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
கிளர்ச்சியாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் பலியானார்கள். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தானில், எப்போதுமே தனி அதிகாரத்தை செலுத்தி வரும் ராணுவம், ராவல்பிண்டி நகரில் உள்ள ராணுவ தலைமையகத்தில் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியது. கூட்டத்திற்கு ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் தலைமை தாங்கினார். இதில் கமாண்டர்கள் அளவிலான அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பிரச்சினைக்கு உடனடியாக அரசியல் ரீதியாக தீர்வுகாண வேண்டும் என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் நேற்று மாலை திடீரென பிரதமர் நவாஸ் ஷெரீப்பை இஸ்லாமாபாத்தில் சந்தித்து பேசினார். அப்போது, நவாஸ் ஷெரீப் தற்காலிகமாக 3 மாத காலம் பதவியில் இருந்து விலகி இருக்கும்படியும், இந்த கால கட்டத்தில் கிளர்ச்சியாளர்களின் கோரிக்கைகளை ஏற்று தேர்தல் முறைகேடு குறித்து விசாரணை நடத்தலாம் என்று அவர் யோசனை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இப்படி ஒரு யோசனை முன்வைக்கப்படவே இல்லை என்று பாகிஸ்தான் அரசும், ராணுவமும் மறுத்துளன.