சீனா- பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் சந்திப்பு.. காஷ்மீர் விவகாரத்தில் ஒத்துழைப்பு நல்குவதாக ஒப்பந்தம்
இஸ்லாமாபாத்: ராணுவ ஒத்துழைப்பு நல்குவது என பாகிஸ்தான்- சீனா ஆகிய இருநாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து இந்தியா- பாகிஸ்தான்- சீனா ஆகிய நாடுகளிடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்திய எல்லைக்கு அருகில் சீனாவும் பாகிஸ்தானும் போர் விமான ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் பாகிஸ்தானின் ராணுவ தலைமை அலுவலகம் உள்ள ராவல்பிண்டியில் உயர் மட்ட கூட்டம் திங்கள்கிழமை நடந்தது. இதில் சீனா ராணுவ அமைப்பின் துணை தலைவர் ஜூ ஜிலியாங், குவாமர் ஜாவித் பாஜ்வாவை சந்தித்தார்.
அப்போது நாடுகளின் பாதுகாப்பு, இரு தரப்பு உறவுகள், இரு நாட்டு நலன்கள் ஆகியவற்றில் அக்கறை செலுத்துவது என்றும் குறிப்பாக காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இரு நாடுகளும் ராணுவ ஒத்துழைப்பு நல்குவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சில் வரை ஆதரவு தந்த சீனாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நன்றி தெரிவித்ததை பாஜ்வா, ஜிலியாங்கிற்கு தெரிவித்தார்.