எல்லை தாண்டி தாக்கியதாக இந்தியா பொய் சொல்கிறது: பாக். ராணுவம்
இஸ்லாமாபாத்: இந்திய ராணுவம் எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்தவே இல்லை என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் எல்லை தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புதன்கிழமை இரவு புகுந்து தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
4 மணிநேரம் நடந்த இந்த தாக்குதலில் 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன, நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான்
மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்த எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் உண்மைக்கு புறம்பாக தெரிவித்துள்ளது. எல்லைக்கு அந்த பக்கத்தில் இருந்து இந்திய ராணுவம் அத்துமீறி சுட்டதில் தான் எங்கள் வீரர்கள் இரண்டு பேர் பலியாகியுள்ளனர் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
பதிலடி
பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தவில்லலை. அப்படி தாக்கினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் ராணுவம் எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் மக்கள்
இந்திய ராணுவம் பொய் சொல்வதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளதை தான் அந்நாட்டு மக்கள் நம்புகிறார்கள். இந்திய ராணுவம் எல்லை தாண்டி தாக்கவில்லை என சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் மக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
யூரி தாக்குதல்
யூரி தாக்குதல் நடந்தபோது அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி தாக்குதலுக்கு பின்னணியில் உள்ளவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என அன்றே தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.