ஒபாமாவின் இந்திய வருகை எதிரொலி: 12 தீவிரவாத அமைப்புகளை தடை செய்து பாசாங்கு செய்யும் பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத்: சமீபத்தில் இந்தியா வந்த போது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, இரண்டு நாள் பயணமாக பாகிஸ்தானிற்கு சென்று, பயங்கரவாத அமைப்புக்கள் குறித்து எச்சரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து, அந்நாட்டில் உள்ள 12 பயங்கரவாத அமைப்புக்களுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.
பெஷாவர் ராணுவ பள்ளி தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 12 பயங்கரவாத அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
மும்பை தாக்குதல் குற்றவாளியான ஹபீஸ் சையத், நடத்திவரும், ஜமாத் உத் தாவா, ஆப்கானைச் சேர்ந்த ஹக்கானி நெட்வொர்க் உள்ளிட்ட அமைப்புக்களும் இதில் அடங்கும். நாட்டின் பாதுகாப்பு கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதன் முதல் கட்டமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய குடியரசுதின சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். அதே நேரம் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கு செல்ல ஒபாமா மறுத்துவிட்டார். இதனால் உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதை ஈடுகட்டும் வகையில், 12 தீவிரவாத இயக்கங்களை தடை செய்து, தன்னையும் நல்ல பிள்ளையாக காட்டிக்கொள்ள முயலுகிறது பாகிஸ்தான்.