பாகிஸ்தானில் பேருந்தில் குண்டுவெடிப்பு: குழந்தைகள் உள்பட 11 பேர் பலி, 22 பேர் படுகாயம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பேருந்தில் குண்டு வெடித்ததில் 2 குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகினர், 22 பேர் காயம் அடைந்தனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவில் இருக்கும் பேருந்து நிலையத்தில் இருந்து திங்கட்கிழமை இரவு பயணிகளுடன் பேருந்து ஒன்று கிளம்ப இருந்தது. அப்போது திடீர் என்று பேருந்தில் இருந்த குண்டு வெடித்ததில் 2 குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகினர், 22 பேர் காயம் அடைந்தனர்.
பலியானவர்களில் பெரும்பாலானோர் கூலி வேலை செய்பவர்கள் என்றும், காயம் அடைந்தவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பலுசிஸ்தான் மாகாண ஐ.ஜி. அல்மிஷ் கான் கூறுகையில்,
பேருந்தின் மேற்கூரை மீது இருந்த பயணிகளின் உடைமைகளோடு வைக்கப்பட்டிருந்த டைமர் குண்டு வெடித்துள்ளது. அந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் இந்த பேருந்து தான் கடைசியாக கிளம்பும் என்பதால் அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்த நினைத்துள்ளனர் என்றார்.
பலியானவர்களில் பலர் பேருந்தின் பின்புறம் இருந்த இருக்கைகள் மற்றும் மேற்கூரையில் அமர்ந்திருந்ததாக டாக்டர் நூர் பலோச் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பலுசிஸ்தான் மாகாண முதல்வர் டாக்டர் மாலிக் பலோச் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பலுசிஸ்தானில் நிலவி வரும் அமைதியை சீர்குலைக்கும் முயற்சி இது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.