பதன்கோட் தாக்குதல்: பாகிஸ்தானில் 3 மாவட்டங்களில் அதிரடி ரெய்டு.. பலர் கைது
பவல்பூர், பாகிஸ்தான்: பதன்கோட் விமானப்படைத் தாக்குதல் தொடர்பாக கூட்டு விசாரணைக் குழுவை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அமைத்து உத்தரவிட்ட சில மணி நேரங்களில் அங்கு அதிரடி நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. 3 மாவட்டங்களில் அதிரடி ரெய்டுகளை பாகிஸ்தான் போலீஸ் உள்ளிட்ட துறையினர் மேற்கொண்டுள்ளனர். பலர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதன்கோட் தாக்குதலை திட்டமிட்டு நடத்தியதாக இந்தியாவால் குற்றம் சாட்டப்படும் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் தலைவரான மெளலானா மசூத் அஸாரின் சொந்த ஊரான பவல்பூரிலும் இன்று பல இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.
பவல்பூர் தவிர ஜீலம் மற்றும் குஜ்ரன்வாலா மாவட்டங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டுகளின்போது சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் பதன்கோட் சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவிக்கையில், பவல்பூரில் உளவுத்துறையினரும், போலீஸாரும் ரெய்டுகளை நடத்தியுள்ளன். இந்தியா கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டன. அங்கு சிலரைப் பிடித்துள்ளனர். அவர்களை அடையாளம் தெரியாத இடத்திற்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் பவல்பூர் பிராந்திய போலீஸ் அதிகாரி அசன் சாதிக் கூறுகையில், கைது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அதுகுறித்து என்னிடம் எந்தத் தகவலும் இல்லை என்று கூறியுள்ளார்.
இருப்பினும் பவல்பூர், குஜ்ரன்வாலா, ஜீலம் மாவட்டங்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்லாமாபாத்தில் உளவுத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில் கைது நடந்திருக்கிறது. எத்தனை பேர் என்பதை சொல்வதற்கில்லை. தீவிர விசாரணை நடந்து வருகிறது என்றனர்.
முன்னதாக பதன்கோட் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்து விசாணை நடத்த பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று உத்தரவிட்டிருந்தார். அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நெருக்கடியைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை அவர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து தற்போது ரெய்டுகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டு நடவடிக்கைக் குழுவில் பாகிஸ்தான் உளவுத்துறை, ஐஎஸ்ஐ, ராணுவ உளவுத்துறை உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
பதன்கோட்டில் தாக்குதல் நடத்தியவர்கள் இந்தியாவிலிருந்து பவல்பூரில் உள்ள ஒரு எண்ணுக்குப் பேசியுள்ளது தொடர்பான ஆதாரம் மற்றும் அந்தத் தொலைபேசி எண் உள்ளிட்ட பல முக்கியத் தகவல்களை பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்துள்ளது. அதன் பேரில் தற்போது ரெய்டுகள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.