அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலைக் கண்டித்து பாக்.கின் ஆப்கன் எல்லை மூடல்
இஸ்லாமாபாத்: தொடர்ந்து அமெரிக்கா நடத்தி வரும் ஆளில்லா விமானத் தாக்குதலைக் கண்டித்து தனது ஆப்கன் எல்லையை நேற்று மூடியுள்ளது பாகிஸ்தான்.
பாகிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட அந்நாட்டு அரசு தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழிப்பதாகக் கூறிக் கொண்டு தொடர்ந்து ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தி வருகிறது அமெரிக்கா.
சமீபத்தில் நடத்தப் பட்ட அத்தைகையத் தாக்குதலில் சிக்கி, பாகிஸ்தான் தலிபான் இயக்க தலைவர் ஹக்கிமுல்லா மெசூத் கொல்லப்பட்டார். இத்தாக்குதல் தலிபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைப்பதாக உள்ளது என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. எனினும் இத்தாக்குதலில் பாகிஸ்தானிற்கும் தொடர்பு உள்ளது எனக் கூறி, அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை கிடையாது எனவும், விரைவில் பாகிஸ்தானில் அதிரடித் தாக்குதல் நடத்தி முக்கியத் தலைவர்களைக் கொல்வோம் எனவும் பாகிஸ்தான் தாலிபன் மிரட்டல் விடுத்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலைக் கண்டித்து கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் நேற்று முதல் தொடர் போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர் பாகிஸ்தானின் ஆளுங்கட்சியும், அதன் கூட்டணிக் கட்சியும் இணைந்து. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளுக்கு பொருட்கள் கொண்டு செல்லும் முக்கிய பாதையில் அமர்ந்து, அவர்கள் தர்ணா செய்கின்ரனர்.
இப்போராட்டம் குறித்து கைபர் பாக்துன்க்வா மாகாணத்தை ஆளும் தெரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் கூறுகையில், ‘அமெரிக்கா தனது தாக்குதலை நிறுத்தும் வரை போராட்டம் தொடரும்' என்றார். விரைவில், கூட்டணி கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியினரும் இப்போராட்டத்தில் இணைய உள்ளனர்.
இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் ஐ.நா. அலுவலகத்தின் அருகில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
தீவிரமடைந்து வரும் போராட்டத்தால், ஆப்கானிஸ்தானுடனான எல்லையை பாகிஸ்தான் அரசு நேற்று மூடிவிட்டது. அதனைத் தொடர்ந்து, பாதுகாப்புக் காரணங்களுக்காக பெஷாவர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், போராட்டம் நடத்தும் இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.