ட்ரம்பின் தடை பட்டியலில் நம்ம "பங்காளி" பாக். வெயிட்டிங் லிஸ்ட்டில்... வெள்ளை மாளிகை தகவல்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளே நுழைய தடை விதித்துள்ளார். அந்தப்பட்டியலில் எதிர்காலத்தில் பாகிஸ்தானும் இடம் பிடிக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவில் நுழைய தற்போது 7 நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்கவும் பரிசீலித்து வருவதாக அதிபர் மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடிப்படைவாத இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டை காக்கும் நடவடிக்கையாக 7 இஸ்லாமிய நாடுகளில் இருந்து மக்கள் வருவதை தடை செய்யும் உத்தரவுக்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார். அமெரிக்காவை ஆதரிப்பவர்களுக்கும் மட்டுமே தங்கள் நாட்டிற்குள் வர அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு விசா வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரின் இந்த முடிவுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் விசா தடை பட்டியலில் நமது அண்டை நாடான பாகிஸ்தானும் பரிசீலனையில் உள்ளது தெரிய வந்துள்ளது. இத்தகவலை வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி ரின்ஸ் பிரிபஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, 7 முஸ்லிம் நாடுகளுக்கு எதிராக டிரம்ப் 'விசா' தடை உத்தரவை நடைமுறைப்படுத்தியுள்ளார். அது போன்று பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் விசா தடை விதிப்பது குறித்த முடிவு பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றார்.
அமெரிக்க வரலாற்றில் பாகிஸ்தான் மீதான இத்தகையை நடவடிக்கை முதன் முறையாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. 7 நாடுகள் மீதான விசா தடைக்கு பலமுறை தீவிரமாக பரிசீலித்த பிறகே இறுதி முடிவு மேற்கொள்ளப்பட்டது என்றும் ரின்ஸ் பிரிபஸ் கூறினார்.