மனிதாபிமான அடிப்படையில் 360 இந்தியர்கள் விடுதலை... பாகிஸ்தான் அறிவிப்பு
இஸ்லாமாபாத்: மீனவர்கள் உள்பட பாகிஸ்தான் சிறையில் வாடும் 360 'இந்தியர்களை விடுதலை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் ஹை கமிஷனுக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அண்மையில் கோரிக்கை ஒன்றை வைத்தது. அதில் பாகிஸ்தானின் பல்வேறு சிறைகளில் வாடும் 385 இந்திய மீனவர்கள் மற்றும் இந்திய பொதுமக்கள் 10 பேரை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டிருந்தது.
மேலும் இந்தியர்களை உடனடியாக விடுதலை செய்யவும், இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெளியவுத்துறை அமைச்சகம் சார்பில் பாகிஸ்தான் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான் அரசு வரும் ஏப்ரல் 7ம் தேதி(திங்கள்கிழமை) 100 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளது.மேலும் சிறையில் கைதிகளாக உள்ள 360 இந்தியர்களை, வாரம் 100பேர் என்ற ரீதியில் இந்த மாதம் 29ம் தேதிக்குள் விடுதலை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
கடைசியாக மிக அதிகபட்சமாக, கடந்த 2010ம் ஆணடு செப்டம்பர் மாதத்தில் 442 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது. அதன் பிறகு தற்போது 360 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.